9 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதினார்கள் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது


9 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதினார்கள் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2 March 2017 9:20 PM GMT)

பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் 31-ந்தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள்.

மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். ஒரு சிலர் தேர்வு எழுத வரவில்லை.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் உயிரியல் பாடங்களை விருப்பமாக எடுத்தவர்கள் 5 லட்சத்து 97 ஆயிரத்து 735 பேர். வணிகவியல் குருப்பை விருப்பமாக எடுத்தவர்கள் 2 லட்சத்து 23 ஆயிரத்து 970 பேர். வரலாறு போன்ற பாடங்களை விருப்பமாக எடுத்தவர்கள் 13 ஆயிரத்து 350 பேர். தொழில் கல்வி மாணவ-மாணவிகள் 63 ஆயிரத்து 690 பேர்கள்.

சென்னை

சென்னை மாநகரில் 407 பள்ளிகளிலிருந்து 145 தேர்வு மையங்களில் மொத்தம் 53,573 பேர் தேர்வு எழுதினார்கள்.

புதுச்சேரியில் 143 பள்ளிகளிலிருந்து 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் எழுதினார்கள்.

மேல்நிலைப் பொதுத்தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 90-க்கும் மேற்பட்ட ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதினார்கள்.

பிளஸ்-2 தேர்வினை தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று பிளஸ்-2 தேர்வினை எழுதிய பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 5,69,304 ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள்

டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர் - வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) வழங்கங்கப்பட்டது.

நேற்று பிளஸ்-2 முதல் தேர்வாக தமிழ் முதல் தாள் நடத்தப்பட்டது. காலையில் எழுந்து மாணவ-மாணவிகள் தமது இஷ்ட தெய்வங்களை வழிபட்டு விட்டு தேர்வு எழுத சென்றனர். பெரும்பாலான மாணவர்கள் பெற்றோரிடம் ஆசிரியர்களிடமும் ஆசி பெற்றனர். சக வகுப்பு தோழர்கள், தோழிகள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

காலை 9 மணிக்கு பள்ளிக்கூட வளாகத்தில் இறை வணக்க பிரார்த்தனை நடைபெற்றது. தேர்வு பணிக்காக வந்துள்ள தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனை முடிந்ததும் தேர்வு எப்படி எழுத வேண்டும் என்று ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளிடம் அறிவுரை வழங்கினார்கள்.

நேற்று காலை 10-15 மணி முதல் பகல் 1-15 மணிவரை தேர்வு நடைபெற்றது. ஆனால் 10 மணிக்கு முன்பாக தேர்வு அறைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார் அவருடன் முதன்மை செயலாளர் த.சபீதா, முதன்மை கல்வி அதிகாரி அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பகல் 1-15 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு, ‘தேர்வு எளிதாக இருந்தது. புத்தகங்களில் இருக்கும் கேள்விகளில் இருந்தே பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு மார்க் கேள்விகள் சில பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டு இருந்தன’ என்றனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-வது தாள் தேர்வு நடைபெறுகிறது.

திருநங்கை

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருநங்கை ஒருவரும் பிளஸ்-2 தேர்வு எழுதினார். 

Next Story