‘நீட்’ மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


‘நீட்’ மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 March 2017 10:45 PM GMT (Updated: 2 March 2017 9:20 PM GMT)

தேர்வு நடைபெறும் மே மாதம் 7-ந் தேதிக்கு முன்பாக ‘நீட்’ மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நீட்’ நுழைவுத் தேர்வு

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 1-3-2017 அன்று முடிந்துவிட்டது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு வருகின்ற மே மாதம் 7-ந் தேதி ‘நீட்’ தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வின் அடிப்படையில்தான் மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழங்களிலும், தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று, இந்த தேர்வை நடத்தும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாத மாணவர்களை மருத்துவப்படிப்பில் சேர்க்கக்கூடாது என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது. தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவதற்கு 3 முறை மட்டுமே ஒரு மாணவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற அடுக்கடுக்கான நிபந்தனைகளால் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்புறத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பே இனி கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை

இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாலும், பலரும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நம்பி ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள். மருத்துவராகும் அனைத்து மாணவர்களின் எதிர்காலக்கனவு தமிழக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகி இருக்கிறது. ‘நீட்’ தேர்வு பற்றிய நிலை என்ன என்பது தெரியாமல் தேர்வு நடைபெறும் மே 7-ந் தேதியை எதிர்நோக்கி ஒருவிதமான மன அழுத்தத்துடனும், குழப்பத்துடனும் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அதைவிட அதிகமான மன அழுத்தத்தில் மாணவர்களின் பெற்றோர் இருக்கிறார்கள். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைப் பார்க்க அமைச்சர்கள் படையெடுக்கிறார்களே தவிர, ‘நீட்’ தேர்வு பற்றி கவலைப்படவில்லை.

ஆகவே, இனிமேலும் மாணவர்களின் நலனுடன் விளையாட வேண்டாம் என்று அ.தி.மு.க. அரசை எச்சரிக்க விரும்புகிறேன். அதேவேளையில் மாநில அரசு உடனடியாக மத்திய அரசை அணுகி, ‘நீட்’ தேர்வு எழுதும் மே 7-ந் தேதிக்கு முன்பாவது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ‘நீட்’ மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசும் தாமதம் செய்யாமல் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிப்பதற்கு மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Next Story