நெல்லை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை


நெல்லை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 March 2017 11:00 PM GMT (Updated: 2 March 2017 9:26 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் கூறினார்.

நெல்லை,


நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறட்சி மற்றும் குடிநீர் திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மை செயலாளரும், நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் பேசியதாவது:–

நிவாரண உதவி தொகை


நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததின் காரணமாக வறட்சி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையானது, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.

விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு எண், பெயர், முகவரி ஆகியவைகளை சரியாக வழங்கியுள்ளார்களாக எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரிடையாக நிவாரண தொகை வரவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் வறட்சி நிவாரண தொகை வரவு வைக்கப்படவில்லையென்றால், அதற்குரிய விளக்கத்தினை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை


வரும் கோடை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கான போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர் தொடர்பான புகார் தொலைபேசி எண் மற்றும் கட்டணமில்லா எண்களில் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க வேண்டும். புகார்களில் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், ராஜேந்திரகுமார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களிடம் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகள்


கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், உதவி கலெக்டர்கள் பெர்மி வித்யா (நெல்லை), வெங்கடேஷ் (தென்காசி), விஷ்ணு (சேரன்மாதேவி), உதவி கலெக்டர் (பயிற்சி) சாருஸ்ரீ, வேளாண்மை துறை இணை இயக்குனர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story