திருவொற்றியூரில் ரேஷன் கடையில் பெண்கள் முற்றுகை போராட்டம்


திருவொற்றியூரில் ரேஷன் கடையில் பெண்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 10:45 PM GMT (Updated: 3 March 2017 4:13 PM GMT)

திருவொற்றியூரில் ரேஷன் கடையில் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

இலவச அரிசி இல்லை

திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு சரிவர பொருட்கள் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு சென்றனர். அப்போது இலவச அரிசி இருப்பு இல்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், ரேஷன் கடையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சாத்தாங்காடு போலீசார் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அப்போது உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள், “ரேஷன் கடையில் பொருட்கள் சரிவர வழங்கப்படுவது இல்லை. ரேஷன் கடையையும் ஊழியர்கள் சரியாக திறப்பது இல்லை. பொருட்கள் கேட்டால் தரக்குறைவாக பேசுகிறார்கள்” என்றனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story