ஓட்டப்பிடாரம் அருகே புள்ளி மான் நாய் கடித்து சாவு தண்ணீர் தேடிவந்தபோது பரிதாபம்


ஓட்டப்பிடாரம் அருகே புள்ளி மான் நாய் கடித்து சாவு தண்ணீர் தேடிவந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 3 March 2017 9:00 PM GMT (Updated: 3 March 2017 6:13 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே காட்டுப் பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்தபோது, நாய் கடித்து குதறியதில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே காட்டுப் பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்தபோது, நாய் கடித்து குதறியதில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

புள்ளி மான்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் பெரியகுளம் காட்டுப்பகுதி மற்றும் ஆரைக்குளம் மலை பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. தற்போது போதிய மழை இல்லாததால், அந்த பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், காட்டு பகுதியில் வசிக்கும் மான்கள் தண்ணீர் தேடி பெரியகுளத்துக்கு வருவது அதிகரித்து உள்ளது.

நாய் கடித்தது

இந்த நிலையில் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக புள்ளி மான் ஒன்று பெரியகுளத்துக்கு வந்தது. அப்போது அங்கு இருந்த நாய், ஒன்று புள்ளி மானை பாய்ந்து சென்று கடித்தது. தப்பி ஓடிய மானை, துரத்தி சென்று நாய் கடித்து குதறியது. இதில், பலத்த ரத்த காயங்களுடன் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. சற்று தொலைவில் இருந்து சிலர் இதை பார்த்து, அப்பகுதிக்கு ஓடினர். இதை பார்த்த, நாய் இறந்த மானின் உடலை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

இது குறித்து தகவல் கிடைத்தவுடன், தூத்துக்குடி வனசரக அலுவலர் விமல்குமார் மற்றும் வன காவலர்கள், புள்ளி மானை மீட்டு, சாலிகுளம் பகுதியில் உள்ள வன சரகர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக இறந்தது. அந்த புள்ளி மானுக்கு 4 வயது இருக்கும் என வன காப்பாளர்கள் தெரிவித்தனர்.


Next Story