பூதப்பாண்டியில் டீக்கடையில் கியாஸ் கசிந்து தீ விபத்து


பூதப்பாண்டியில் டீக்கடையில் கியாஸ் கசிந்து தீ விபத்து
x
தினத்தந்தி 11 March 2017 9:33 PM GMT (Updated: 11 March 2017 9:33 PM GMT)

பூதப்பாண்டியில் டீக்கடையில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டியில் போலீஸ் நிலையம் எதிரே ஒரு டீக்கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் அதன் உரிமையாளர் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்தது. உடனே, கடையில் இருந்தவர்கள் சேர்ந்து சிலிண்டரை கடையில் இருந்து வெளியேற்றினர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் பலர் விரைந்து வந்து, மணல், தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி  சிலிண்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

தீயை அணைத்தனர்

இதைத்தொடர்ந்து, அருகில் இருந்த கியாஸ் நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த நிறுவன ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளுடன் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர், பாதுகாப்பாக அந்த சிலிண்டர் அப்புறப்படுத்தப்பட்டது.

சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story