ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 April 2017 11:00 PM GMT (Updated: 1 April 2017 8:39 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன்கார்டுகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்ட தொடக்க விழா தஞ்சை பாலாஜி நகரில் உள்ள ரேஷன் கடையில் நடந்தது. நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன் வரவேற்றார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளார் மணிமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டை கலெக்டர் அண்ணாதுரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசால் ஏழை எளிய மக்களுக்கு மின்னணு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன்கடைகளில் பொருட்கள் அவரவர்களுக்கு முறையாக சென்று சேரும். ஸ்மார்ட் கார்டு இல்லாமல் பொது வினியோகக் கடையில் பொருட்கள் பெற முடியாது. இந்த ஸ்மார்ட் கார்டை மற்ற நபர்கள் பயன்படுத்தினால் கார்டு உரிமைதாரர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தப்படும்.

30 ஆயிரம்

ரேஷன் கடைகளில் என்னென்ன பொருள் பெற்றுள்ளோம் என்பதையும் குறுஞ்செய்தி மூலம் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் ரேஷன் கடைகளில் துல்லியமான விற்பனையை கண்டுபிடிக்க முடியும். இந்த ஸ்மார்ட் கார்டில் உள்ள இணைய தள முகவரியில் ரேஷன் பொருட்கள் தொடர்பான புகார் தெரிவிக்கலாம். ஸ்மார்ட் கார்டு காணாமல் போனால் அருகிலுள்ள பொது சேவை மையத்தில் அதன் நகலை பெற்றுக் கொள்ளலாம்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் உள்ள 1,184 நியாய விலைக்கடைகள் மூலம் 6 லட்சத்து 18 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஸ்மார்ட்கார்டு வழங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக தஞ்சை தாலுகாவில் உள்ள 155 அங்காடிகளில் 30 ஆயிரம் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து தாலுகாக்களிலும் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும்.

பொருட்கள் பெறலாம்

ஸ்மார்ட் கார்டு வரப்பெற்றுள்ள குடும்ப அட்டை தாரர்களின் மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் குறுந்தகவலாக அனுப்பப்படும். குடும்ப அட்டைதாரர்கள் அந்த குறுந்தகவலையும், பழைய குடும்ப அட்டையையும் கொண்டு வந்து புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையை அந்தந்த நியாய விலைக் கடைகளில் பெற்றுச் செல்லலாம். இந்த கடவுச்சொல் வந்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை பெற்றுச்செல்லலாம். ஸ்மார்ட் கார்டு வரும் வரை பழைய ரேஷன்கார்டு மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை துணைத்தலைவர் வேங்கை கணேசன், கூட்டுறவு பண்டக சாலை இயக்குனர்கள் பொன்.நாகராஜ், கிறிஸ்தவமேரி, பானுமதி, அமுதா, மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் குருமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story