‘ஜனாதிபதி பதவிக்கு மோகன் பாகவத்தை நியமிக்க வேண்டும்’ காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாபர்ஷெரீப், பிரதமருக்கு கடிதம்


‘ஜனாதிபதி பதவிக்கு மோகன் பாகவத்தை நியமிக்க வேண்டும்’ காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாபர்ஷெரீப், பிரதமருக்கு கடிதம்
x
தினத்தந்தி 1 April 2017 11:46 PM GMT (Updated: 1 April 2017 11:46 PM GMT)

ஜனாதிபதி பதவிக்கு மோகன் பாகவத்தை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜாபர்ஷெரீப், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா அக்கட்சியில் இருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். இந்த நிலையில் அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இன்னொரு மூத்த தலைவர் ஜாபர்ஷெரீப் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை நியமிக்கும் படி ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நாட்டின் ஜனாதிபதி பதவியில் அமர தகுதியானவர். அரசியல் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், அந்த பதவியில் அமருபவர்கள் அரசியல் சாசனத்தை கட்டி காப்பவராக இருக்க வேண்டும். மேலும் நாட்டின் நலன் முக்கியம். ஜனாதிபதி பதவிக்கு மோகன் பாகவத்தை நியமித்தால், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மாற்று கருத்துகளை கொண்டவர்களும்...

மோகன் பாகவத் ஜனாதிபதியானால், சிறுபான்மையின மக்கள் உள்பட யாருக்கும் பிரச்சினை ஏற்படாது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி நல்ல முடிவை எடுத்து நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலை நிறுத்த வேண்டும். மோகன் பாகவத்துக்கு நாட்டுப்பற்று உள்ளது. அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒட்டுமொத்த மக்களின் நலன் காக்கும் வகையில் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

வங்காளதேச நாட்டை உருவாக்குவதற்காக பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தபோது, அதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு வழங்கியது. யாரையும் குறுகிய மனப்பான்மையுடன் பார்க்கக்கூடாது. மாற்று கருத்துகளை கொண்டவர் களும் ஜனாதிபதி பதவிக்கு மோகன் பாகவத்தை நியமிக்க பரந்த மனப்பான்மையுடன் ஆதரிக்க வேண்டும்.

எந்த குறுக்கீடும் ஏற்படாது

நான் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவராக, சிறுபான்மையினராக, ஜனாதிபதி பதவிக்கு மோகன் பாகவத்தை ஆதரிக்கிறேன். அதே போல் மற்றவர்களும் அவரை ஆதரிப்பதில் பயப்படக்கூடாது. சரியாக சிந்திக்கும் மக்கள் எனது இந்த கருதை ஏற்றுக்கொள்வார்கள் என்று கருதுகிறேன். எனவே, ஜனாதிபதி பதவிக்கு மோகன் பாகவத்தை நியமிக்க வேண்டும்.

மேலும் தாங்கள் கூறுவது போல் பாராளுமன்றம், சட்டமன்றம், மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.

இதனால் அரசுக்கு செலவு மிச்சமாகும். நாட்டின் வளர்ச்சிக்கு எந்த குறுக்கீடும் ஏற்படாது. எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கடிதம் எழுதுகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்து வரும் ஜாபர்ஷெரீப், விரைவில் பா.ஜனதாவில் சேருவார் என்று கூறப் படுகிறது. 

Next Story