சென்னையை விட பெங்களூருவில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு


சென்னையை விட பெங்களூருவில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 April 2017 11:50 PM GMT (Updated: 1 April 2017 11:50 PM GMT)

சென்னையை விட பெங்களூருவில் வெயில் அதிகரித்து வருகிறது.

பெங்களூரு,

பூங்கா நகரம், குளுகுளு நகரம் என்று பெயர் பெற்றது பெங்களூரு. இங்கு நிலவி வரும் சீதோஷ்ணநிலை, தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு பல வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெங்களூருவில் தங்களின் கிளைகளை அமைத்துள்ளன. இதனால் பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் குளுமையான சீதோஷ்ணநிலைக்கு பெயர் பெற்ற பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மக்களை வெயில் வாட்டி வதைத்தது. இந்த ஆண்டு கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு வானிலை ஆய்வு மையம் கணித்த வெயிலின் அளவை காட்டிலும் பெங்களூருவில் கூடுதலாக 2 டிகிரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொடும் நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தாவை காட்டிலும் இந்த ஆண்டு பெங்களூருவில் மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் பெங்களூருவில் 96.8 டிகிரி (35.6 செல்சியஸ்) வெயில் பதிவாகி உள்ளது. இது சென்னை நகரில் பதிவாகி இருந்த வெயிலின் அளவை விட 1.4 செல்சியஸ் அதிகமாகும்.

சென்னையை விட...

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் பெங்களூருவில் பதிவாகி உள்ள சராசரி வெப்பநிலை 97 டிகிரி (36.06 செல்சியஸ்) ஆகும். ஆனால் வெயிலின் உச்சம் அதிகமாக உள்ள சென்னையில் கடந்த 5 ஆண்டுகளாக இதே மார்ச் மாதத்தில் சராசரி வெப்ப நிலை 96.51 டிகிரி (35.84 செல்சியஸ்) தான். அதாவது கடந்த 5 ஆண்டுகளில் சென்னையை ஒப்பிடும் போது பெங்களூருவில் கூடுதலாக 0.22 செல்சியஸ் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது. இதே போல் கடந்த மாதம் பெங்களூருவில் பதிவான அதிகப்படியான வெப்ப நிலை 37.2 செல்சியஸ் ஆகும்.

மேலும் கர்நாடக இயற்கை பேரிடர் மையத்தின் ஆய்வின்படி இந்த ஆண்டு பெங்களூருவில் லால்பார்க், உத்தரஹள்ளி பகுதியில் தான் மதிய நேரங்களில் வெப்ப நிலை அதிகமாக பதிவாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக நகரில் நிலவி வரும் வறண்ட வானிலையும், காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதும் தான் அதிகப்படியான வெப்பநிலை பதிவாக காரணம். மேலும் பெங்களூருவில் அதிகரித்து வரும் வாகனங்களாலும் நகரில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாகி வருவதாக இயற்கை பேரிடர் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரணம் என்ன?

பெங்களூருவில் வெப்ப நிலை அதிகரிப்பதற்கான காரணம் பற்றி சுற்றுச்சூழல் பேராசிரியரான சுகுமார் கூறியதாவது:-

பெங்களூரு நகரை கடற்கரை நகரங்களான சென்னை, கொல்கத்தா, மும்பையுடன் ஒப்பிட முடியாது. ஏன் என்றால் அங்கு தரையின் மேற்பரப்பில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது கடல் காற்றில் வெப்ப நிலை குறைந்து காணப்படும். இதனால் நகரின் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். ஆனால் பெங்களூரு நகரம் அப்படிப்பட்ட நகரம் அல்ல. இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக மரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கட்டிடங்களின் மேல் பகுதியில் கண்ணாடிகள் பதிக்கும் பழக்கம் வணிகர்கள், பெரும் நிறுவனங்கள் மற்றும் மக்களிடையே அதிகரித்து உள்ளது. இதனால் மதிய வேலைகளில் இந்த கண்ணாடிகள் வெயிலை உள்வாங்கி கொண்டு மீண்டும் பிரதிப்பலிக்கிறது. இதனால் மதிய வேளைகளில் அதிக வெப்ப நிலை நகரில் பதிவாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story