ராமேசுவரம் பஸ்நிலையம் அருகே சுங்கச்சாவடியை அகற்ற 2–வது முறையாக நகராட்சி ஆணையாளருக்கு நோட்டீசு


ராமேசுவரம் பஸ்நிலையம் அருகே சுங்கச்சாவடியை அகற்ற 2–வது முறையாக நகராட்சி ஆணையாளருக்கு நோட்டீசு
x
தினத்தந்தி 2 April 2017 10:30 PM GMT (Updated: 2 April 2017 4:00 PM GMT)

ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியை அகற்ற தேசிய

ராமேசுவரம்,

பாம்பன் ரோடு பாலத்தில் புதிதாக அதி நவீன முறையில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ரூ.2 கோடி நிதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலை பணிகளை நேற்று தேசிய நெடுஞ்சாலை துறையின் உதவி கோட்ட பொறியாளர் சங்கர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:– பாம்பன் ரோடு பாலத்தில் தரமான முறையில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ராமநாதபுரம்–ராமேசுவரம் இடையே தேசிய நெடுஞ் சாலையில் எந்த இடத்திலும் சுங்கச் சாவடி இருக்கக் கூடாது என தேசிய நெடுஞ் சாலை துறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து மண்டபம் அருகே காந்திநகர் பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு கட்டணம் என்ற பெயரில் வாகனங்களிடம் வசூல் செய்துவந்த சுங்கச்சாவடி நிரந்தரமாக அகற்றப் பட்டுள்ளது.

நோட்டீசு

விதிமுறையை மீறி ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி சுங்கச்சாவடியை அகற்ற ஏற்கனவே ஒருமுறை நகராட்சி ஆணையாளருக்கு நோட்டீசு கொடுக்கப் பட்டது. ஆனால் இது வரையிலும் சுங்கச்சாவடி அகற்றப்படாததால் 2–வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கும் தெரிவித்துள்ளோம். கலெக்டர், நகராட்சி சுங்கச் சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story