விக்கிரவாண்டி அருகே காரில் கடத்திவரப்பட்ட 288 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது


விக்கிரவாண்டி அருகே காரில் கடத்திவரப்பட்ட 288 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 April 2017 10:45 PM GMT (Updated: 2 April 2017 5:55 PM GMT)

விக்கிரவாண்டி அருகே காரில் கடத்திவரப்பட்ட 288 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் சோதனைச்சாவடியில் போலீஸ் ஏட்டு சிவானந்தம் மற்றும் போலீசார் நேற்று தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வேகமாக கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை நடத்தினர்.

சோதனையில் அந்த காரில் 6 அட்டை பெட்டிகளில் மொத்தம் 288 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சங்கராபுரம் மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமார் (வயது 24) என்பது தெரிந்தது.

கைது

மேலும் முத்துகுமார் சங்கராபுரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமாரையும், காருடன் 288 மதுபாட்டில்களையும் போலீசார் விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். மேலும் 288 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story