அந்தப்புரத்து ராணியும்.. ஒட்டக்கூத்தரின் பாட்டும்..


அந்தப்புரத்து ராணியும்.. ஒட்டக்கூத்தரின் பாட்டும்..
x
தினத்தந்தி 14 April 2017 7:53 AM GMT (Updated: 14 April 2017 7:53 AM GMT)

மக்களாக பிறந்த நாம் நம் குலப்பெருமையையும், பிறந்த பொன்னாட்டின் வரலாற்றையும், பேசும் தாய்மொழியின் வளத்தையும், சிறப்பையும் உணர்ந்து கொள்வது கடமையாகும்.

ஒட்டக்கூத்தர்

சிறந்து விளங்கிய பெருமக்களை அவர்கள் வாழ்ந்த வாழ்வு முறையினையும் அறிந்து வாழ்வது நமக்கு பயன்தரும்.

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் செயங்கொண்டான்
விருத்தம் என்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக்
கொட்டக்கூத்தன்
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் வசைபாடக்
காளமேகம்
பண்பாக வுயர்சந்தம் படிக்காச லாதொருவர்
பகரொணாதே


என்பது பழம்பாடல். ஒட்டக்கூத்தரின் புலமை சிறப்பை உயர்த்த பாடப்பட்டதே இப்பழம்பாடலாகும்.

ஒட்டக்கூத்தர் முதல் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழனின் (கி.பி.1120-1136) அவைக்களப்புலவராக திகழ்ந்தார். விக்கிரம சோழனின் மகன் 2-ம் குலோத்துங்க சோழனுக்கும் (கி.பி.1136-1150), அவரின் மகன் 2-ம் ராஜராஜனுக்கும் (கி.பி.1150-1163) அவைக்களப்புலவராகவும், தமிழ் ஆசிரியராகவும் திகழ்ந்தார் ஒட்டக்கூத்தர். மூன்று சோழ மன்னர்களுக்கு தொடர்ந்து அவைக்களப் புலவராக திகழ்ந்த பெருமை ஒட்டக்கூத்தரையே சாரும்.

இதனால் இவருக்கு கவுடப்புலவர், கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, சர்வஞ்ஞகவி என பல்வேறு சிறப்புப்பெயர்கள் உண்டு. உலக இயல்பை கடந்து வர்ணனைகளை அமைத்து செய்யுள் பாடியதால் கவுடப்புலவர் என்றும், அக்காலத்தில் இருந்த புலவர் பெருமக்களுள் இவர் சிறந்து விளங்கியதால் கவிராட்சசன் என்றும், கவிச்சக்கரவர்த்தி என்றும் போற்றப்பட்டார். சோழ மன்னர்கள் அளித்த காளம் என்னும் விருது பெற்றதால் காளக்கவி என்றும் போற்றப்பட்டார். தமிழ்மொழி, வடமொழி ஆகிய இரண்டிலும் உள்ள நூல்களை நன்கு பயின்று தாம் உணர்ந்த கருத்துகளை தெளிவாக புலப்படுத்தும் விதத்தில் பாடல்கள் இயற்றியதால் சர்வஞ்ஞகவி என்றும் அழைக்கப்படுகிறார்.

இவையெல்லாம் தக்கையாகப்பரணி என்னும் நூலாலும் அதன் உரையாலும், சோழமண்டல சதகம் என்னும் நூலாலும் அறியப்படுகின்றது. ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலம் கி.பி.12-ம் நூற்றாண்டு. இவரின் இயற்பெயர் கூத்தர். இது நடராஜப்பெருமானின் பெயராகும். ஒட்டக்கூத்தினை ஆடியதால் இவர் ஒட்டக்கூத்தர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்புலவரின் பிறந்த ஊர் மலரி. இந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெறும்பூர் ஆகும். திருநாவுக்கரசர் இந்த ஊரினை திருஎரும்பியூர் என்றே அழைக்கிறார்.
நளவெண்பா பாடிய புகழேந்தி புலவர், சேக்கிழார் பெருமான் ஆகியோர் இந்த காலகட்டத்தில் தான் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கம்பரின் பிறந்தநாளையும், அவர் மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ளதால் கம்பர் இவர் காலத்திற்கு முந்தியவர் என்ற செய்தியை வரலாறு கூறுகின்றது.

ஒட்டக்கூத்தர் இயற்றியதாக இப்போதும் அறியப்படும் நூல்கள் விக்கிரமசோழனுலா, கலிங்கப்பரணி, அரும்பைத்தொள்ளாயிரம், குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்கன் சோழனுலா, ராஜராஜ சோழன் உலா, தக்கயாகப்பரணி, காங்கேயன் நாலாயிரக்கோவை போன்றவை. மேலும் இவர் சில செய்யுட்கள் பாடியதாக தமிழ் நாவலர் சரிதை போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஒட்டக்கூத்தர் சிறந்த பண்பாளர். தன்னை போன்ற புலவர்களை பெரிதும் மதிப்பவர். புலவர் பொய்கையாரை ‘மேதக்க பொய்கை, நல்லவன் பொய்கை’ என்று பாராட்டுகிறார். ஜெயங்கொண்டாரை ‘தேடற் கருங்கவி சக்கரவர்த்தி’ என்றும், அவர் தம் படைப்பினை ‘பாடற்பெரும் பரணி’ என்றும் போற்றுகிறார். தம்மை ஆதரித்த பல்லவராயன் பல்லவனை ‘பாடாதார் பசியனைய பசியினமே’ என்று போற்றுகிறார். அதேபோல் அகத்திய முனிவரை ‘அறந்தவா மலயப்பொருப்பில் அகத்தியன், தமிழ்க்குன்றில் வாழும் சடாதாரி’ என்றும் போற்றியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் காலத்துக்கு முன்பு தெய்வத்தின் மீது உலா பாடப்பட்டது. ஒட்டக்கூத்தரே முதன் முதலாக மன்னர் மீது உலா பாடினார். ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள் என்பர்.

குலோத்துங்க சோழனின் மனைவி பாண்டிய நாட்டின் ராஜகுமாரி. அவளின் ஆசிரியர் நளவெண்பா காவியம் பாடிய புகழேந்திப்புலவர். இவர் சோழ நாட்டில் தங்கி இருந்தபோது ஒட்டக்கூத்தரால் புகழேந்திப்புலவர் சிறை வைக்கப்பட்டார். இதனால் கோபம் கொண்ட அரசி, மன்னன் குலோத்துங்கன் அந்தப்புரம் வரும் சமயம் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். அந்த காலத்தில் மகாராணி கோபம் கொண்டால் மன்னர்கள் தங்கள் அவைக்களப்புலவரை அனுப்பி சமாதானம் செய்வது வழக்கம்.

அதன்படி குலோத்துங்க சோழன் தன் அவைக்களப்புலவரும், குருவுமான ஒட்டக்கூத்தரை சமாதானம் செய்விக்க வேண்டி ராணியின் அந்தப்புரத்திற்கு அனுப்பினார். புலவரும் ராணியின் அறைக்கு முன்னால் நின்று கொண்டு பாடல்கள் மூலம் சமாதானப்படுத்த முயன்றார். ஒட்டக்கூத்தரின் பாடலை கேட்ட ராணி மேலும் கோபமுற்று கதவை தாழிட்டு கொண்டாள். ஆதலாலேயே ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத்தாழ்ப்பாள் என்பர். புகழேந்திப்புலவர் சிறையில் இருப்பது தான் ராணியின் கோபத்திற்கு காரணம் என்பதை உணர்ந்த மன்னர் புலவரை உடனே விடுதலை செய்தார்.

Next Story