மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு


மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 Jun 2017 11:00 PM GMT (Updated: 7 Jun 2017 9:12 PM GMT)

மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மோகனூர்,

மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் காவிரி ஆற்றுப்பகுதியில் அரசு மணல் குவாரி கடந்த 5-ந் தேதி தொடங்கப்பட்டது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து லாரிகளில் அள்ளப்பட்ட மணல் அங்கேயே கொட்டப்பட்டு லாரிகள் எடுத்து செல்லப்பட்டன.

அதன்பிறகு அந்த குவாரியில் மணல் அள்ளப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் 2 பொக்லைன் எந்திரங்கள் மணல் குவாரிக்குள் கொண்டு வரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதையறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து மணல் அள்ளக்கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். இது குறித்து தகவல் கிடைத்ததும், நாமக்கல் உதவி கலெக்டர் ராஜசேகர், தாசில்தார் ராஜகோபால், மாவட்ட குற்றப்பதிவேட்டு கூட கூடுதல் கண்காணிப்பாளர் ராமசாமி ஆகியோர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், இந்த பகுதியில் மணல் அள்ளினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், ஏற்கனவே மணல் அள்ளியவர்கள் ஆற்றில் 15, 20 அடி ஆழத்திற்கு மணல் அள்ளியதால் காவிரி ஆற்றில் நீராதாரம் பாதிக்கப்பட்டு விட்டது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு மணல் அள்ளுவது தடைபட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், ‘தற்போது இங்கு மணல் அள்ள வேண்டாம், பொதுமக்கள்- அதிகாரிகள் இணைந்து குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம்‘ என்றும் அதிகாரிகளிடம் கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.


Next Story