12 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம்


12 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2017 10:30 PM GMT (Updated: 7 Jun 2017 9:13 PM GMT)

கீழப்பெரம்பலூர் வரத ராஜபெருமாள் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு பல்வேறு வாகனங்களில் வரத ராஜபெருமாள் வீதிஉலா நடைபெற்றது. இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளாக தேர் பழுதாகி இருந்ததாலும், கோவில் திருவிழா பல்வேறு காரணங்களாலும் நடை பெறாமல் இருந்தது. இந்நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஒவ்வொரு குடும்பத்தினரின் பங்களிப்புடன் தேர் சீரமைக்கப்பட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம்

அதை தொடர்ந்து நேற்று காலை சுவாமிக்கு மஞ்சள் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத வரதராஜபெருமாளுக்கு மலர் களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை, செண்டை வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் படை சூழ அசைந்து ஆடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத வரதராஜபெருமாளுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் தேர் 3 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது.

அன்னதானம்

தேரோட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஆன்மிக சான்றோர்கள் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். தேரோட்டத்தில் கோவில் ஆய்வாளர் மலையரசு பாண்டியன், செயல் அலுவலர் ரமேஷ், கணக்காளர் திருநாவுக்கரசு, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சோழன், வெங்கடாசலம், பொய்யாமொழி மற்றும் வயலூர், கீழப்பெரம்பலூர், அகரம்சீகூர், வேள்விமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குன்னம் போலீசார் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய் திருந்தனர்.


Related Tags :
Next Story