பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? அரிசி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை


பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? அரிசி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை
x
தினத்தந்தி 8 Jun 2017 11:00 PM GMT (Updated: 8 Jun 2017 7:07 PM GMT)

தஞ்சையில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? என அரிசி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரிசி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்த வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், ராஜ்குமார், கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், வடிவேல், பாண்டி, உமாகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் உள்ள அரிசி கடைகளில் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.

பிளாஸ்டிக் அரிசியானது தண்ணீரில் மிதக்கும் என்பதால் சில மூட்டைகளில் அரிசியை எடுத்து தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு அரிசி மிதக்கிறதா? என்று அதிகாரிகள் பார்த்தனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரிசி ஆலைகளிலும் பிளாஸ்டிக் அரிசி வைக்கப்பட்டு இருக்கிறதா? என்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆனால் பிளாஸ்டிக் அரிசி எதுவும் சிக்கவில்லை.

புகார் தெரிவிக்கலாம்

இது குறித்து நியமன அலுவலர் ரமேஷ்பாபு நிருபர்களிடம் கூறும்போது, பிளாஸ்டிக் அரிசியை தீயில் காண்பித்தால் அது உருகி விடும். மேலும் அரிசியை வேகவைக்கும்போது அது பிளாஸ்டிக் அரிசியா? இல்லையா? என்பதை கண்டு பிடிக்க முடியும். பிளாஸ்டிக் அரிசியை யாராவது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக் அரிசி மற்றும் கலப்பட அரிசி கண்டறியப்பட்டால் 04362-276511 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Related Tags :
Next Story