பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு


பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 9 Jun 2017 7:30 PM GMT (Updated: 9 Jun 2017 6:57 PM GMT)

பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

விக்கிரமசிங்கபுரம்,

பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

என்ஜினீயரிங் மாணவர்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி கல்யாணி தெருவை சேர்ந்தவர் தங்கராஜா. இவருடைய மகன் அஜீத் (வயது 21). சென்னை வண்டலூரில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களான நெல்லையை சேர்ந்த ஆசீப் மற்றும் ஆலங்குளம் அருகே உள்ள காளாத்திமடத்தை சேர்ந்த நிசாந்த் மணிக்குமார் ஆகியோருடன் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க சென்றார்.

பின்னர் அவர்கள் குளித்துவிட்டு அருவிக்கு மேலே உள்ள கல்யாண தீர்த்தத்துக்கு சென்றனர். அப்போது அஜீத் அங்குள்ள தடாகத்தில் குளிக்க சென்றார். தண்ணீர் ஆழமாக இருந்ததாலும், அஜீத்துக்கு சரிவர நீச்சல் தெரியாததாலும் மூச்சு திணறியவாறு தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

தண்ணீரில் மூழ்கி சாவு

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அஜீத் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை நண்பர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜீத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story