கட்டிய பணத்தை திருப்பி தரக்கோரி அறக்கட்டளை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்


கட்டிய பணத்தை திருப்பி தரக்கோரி அறக்கட்டளை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2017 11:00 PM GMT (Updated: 12 Jun 2017 9:07 PM GMT)

கட்டிய பணத்தை திருப்பி தரக்கோரி அறக் கட்டளை அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி கருமண்டபம் ரோடு காந்தி நகர் 1-வது பிரதான சாலையில் ஒரு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொது மக்களிடம் மாத தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் சில மாதங்கள் கட்டினால் ரூ.80 ஆயிரம் வங்கியில் கடன் பெற்று தருகிறோம் என்று கூறி பலரிடம் பணம் வசூல் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் பணம் கட்டியவர்களுக்கு கடன் பெற்றுத்தரவில்லை என்றும், மேலும் கட்டிய பணத்தை திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் கட்டி ஏமாந்த சேலத்தை சேர்ந்த பொது மக்கள் பலர் கட்டிய பணத்தை திருப்பி தரக்கோரி நேற்று மாலை 6 மணி அளவில் சம்பந்தப்பட்ட அறக்கட்டளை அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அறக்கட்டளை அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து அவர்கள் கூறுகையில், ஒரு சில மாதம் வரை ரூ.2 ஆயிரம் வீதம் தவணை கட்டினால் ரூ.30 ஆயிரம் மானியத்தில் ரூ.80 ஆயிரம் கடன் பெற்று தருவதாக கூறினார்கள். இதை நம்பி கடந்த ஒரு வருடமாக பணத்தை கட்டினோம். ஆனால் அவர்கள் கடன் பெற்று தராமல் ஏமாற்றி விட்டனர். கட்டிய பணத்தை திருப்பி கேட்டால் கொடுக்க மறுக்கின்றனர். எனவே கட்டிய பணத்தை திருப்பி தரக்கோரி போராட்டம் நடத்தினோம் என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த செசன்சு கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் பலர் இதே கோரிக்கை வைத்து அறக்கட்டளை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Related Tags :
Next Story