டி.வி.பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலை
![டி.வி.பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலை டி.வி.பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்–2 மாணவி தீக்குளித்து தற்கொலை](https://img.dailythanthi.com/Images/Article/201706130425359882_Plus2-student-fire-and-suicide_SECVPF.gif)
டி.வி.பார்த்ததை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ்–2 மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி,
பொன்னேரி ஜீவா தெருவில் வசித்து வருபவர் மாதவன்(வயது 41). இவருடைய மகள் பிரபாவதி(17). இவர், பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த பிரபாவதி, டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த அவருடைய தாயார், தொடர்ந்து டி.வி.யே பார்த்துக்கொண்டு இருக்கிறாயே. புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டியது தானே என்று தனது மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.
தீக்குளித்து தற்கொலைஇதனால் மனம் உடைந்த மாணவி பிரபாவதி, திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி மாணவி பிரபாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.