போலீசார் வாகன சோதனை பல்வேறு கடைகளில் கதவை உடைத்து திருடியவர் கைது


போலீசார் வாகன சோதனை பல்வேறு கடைகளில் கதவை உடைத்து திருடியவர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2017 10:15 PM GMT (Updated: 16 Jun 2017 9:34 PM GMT)

போலீசார் வாகன சோதனையின் போது பல்வேறுகடைகளில் கதவை உடைத்து திருடியவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.35ஆயிரத்து 413 பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை புறவழிச்சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மொபட்டில் வந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் மொபட்டில் இருப்பு கம்பி மற்றும் ஜல்லிக்கரண்டி வைத்திருந்தார். மேலும் ஒரு பையில் ரூ.18ஆயிரத்து 842 சில்லரை காசுகள் வைத்திருந்தார்.

உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. மேலும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனே போலீசார் அவரை வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர் கடந்த 13-ந் தேதி வில்லியனூர் பகுதியில் உள்ள ஒரு மதுபானக்கடையில் இரும்பு கதவை உடைத்து ரூ.18,842-ம், வில்லியனூர் புறவழிச்சாலையில் ஒரு பேக்கரி மற்றும் ஓட்டல் கதவை உடைத்து ரூ.16,571-ம் என மொத்தம் ரூ.35,413 திருடியது தெரியவந்தது. அவர் வந்த மொபட் மறைமலை அடிகள் சாலையில் திருடியது என்பது தெரியவந்தது.

உடனே போலீசார் இது தொடர்பாக சக்திவேலை கைது செய்து அவரிடம் இருந்து 35,413 ரொக்க பணத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை கைது செய்த வில்லியனூர் போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் பாராட்டு தெரிவித்தார்.

Next Story