குடிநீர் வசதி கேட்டு கிராமமக்கள் முற்றுகை போராட்டம்


குடிநீர் வசதி கேட்டு கிராமமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:37 PM GMT (Updated: 2017-06-17T04:07:13+05:30)

ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன்பு குடிநீர் வசதி கேட்டு கிராமமக்கள் முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், கரூர் ஊராட்சியை சேர்ந்த கோனேரியேந்தல், கொங்கிரான்வயல், வடக்கூர் ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கரூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஆழ்குழாய்கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில நாட்களாக இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு, குடிநீர் வசதி கேட்டும், புதியதாக ஒரு ஆழ்குழாய்கிணற்றை அமைத்து தரக்கோரியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் பவானி, வட்டாரவளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) தமிழ்ச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாப்பாகுடியில் உள்ள ஆழ் குழாய் கிணற்றிலிருந்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story