சென்னை நந்தனத்தில் வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து பெண் பலி


சென்னை நந்தனத்தில் வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 24 Jun 2017 10:45 PM GMT (Updated: 24 Jun 2017 5:57 PM GMT)

சென்னை நந்தனத்தில் வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார். இந்த சம்பவத்தில் தந்தை–மகன் படுகாயம் அடைந்தனர்.

சென்னை, 

சென்னை நந்தனம் தாமரை காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 2–வது மாடியில் வசித்து வருபவர் மாரி(வயது 60). இவரது மனைவி கிருஷ்ணாம்மாள்(53). இவர்களது மகன் சதீஷ்(22).

நேற்று மாரியின் வீட்டில் உள்ள நீர் இரைக்கும் மின் மோட்டார் பழுதாகி விட்டது. உடனே மாரி ஊழியர்களை வரவழைத்து மின் மோட்டாரை சரி செய்யும் பணியை மேற்கொண்டார்.

இந்த பணிகளை மாரி 2–வது மாடியின் பால்கனியில் இருந்து மனைவி கிருஷ்ணாம்மாள் மகன் சதீஷ் ஆகியோருடன் பார்த்து கொண்டிருந்தார்.

பால்கனி இடிந்து விழுந்தது

அப்போது பால்கனி சுவர் வலுவிழந்து இருந்ததால் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பால்கனியில் இருந்து பணிகளை பார்த்துக்கொண்டிருந்த 3 பேரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அருகில் உள்ளவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் சாவு

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிருஷ்ணாம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை–மகன் இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story