பெரம்பலூர் அருகே சரக்கு வேன் மரத்தில் மோதியதில் 2 பேர் பலி


பெரம்பலூர் அருகே சரக்கு வேன் மரத்தில் மோதியதில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 Jun 2017 10:15 PM GMT (Updated: 25 Jun 2017 9:04 PM GMT)

பெரம்பலூர் அருகே குல தெய்வ கோவிலுக்கு சென்றபோது சரக்கு வேன் ஒன்று மரத்தில் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி(வயது 60). இவர் மற்றும் இவருடைய உறவினர்கள் மணிவண்ணன் மகன் உதயன்(26), அவருடைய மனைவி சரண்யா(25), இளவரசி(56) உள்பட 6 பேர் நொச்சியத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டிற்காக நேற்று சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

சரக்கு வேனை அதே ஊரை சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஓட்டினார். செஞ்சேரி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது.

2 பேர் பலி

இதில் சரக்கு வேனில் முன்புறத்தில் அமர்ந்திருந்த துரைசாமி, உதயன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இளவரசி, சரண்யா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் துரைசாமி உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் துரைசாமி, உதயன் ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story