சிற்ப தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்


சிற்ப தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:45 PM GMT (Updated: 7 Aug 2017 9:04 PM GMT)

சிற்ப தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சீர்காழி,

சீர்காழியில், தமிழ்நாடு திருக்கோவில் சிற்ப தொழிலாளர்கள் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில அவை தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நடராஜன், மாநில தலைவர் சிவானந்தம், மாநில பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். இதில் பாரதி எம்.எல்.ஏ., அண்ணாமலை பல்கலைக் கழக ஓய்வு பெற்ற பொருளியல் துறை தலைவர் அரங்காச்சாரி, ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

நலவாரியம்

சிற்ப தொழிலாளர்களின் நலன் கருதி தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்வது. திருக்கோவில்களில் மரபுவழி பயிற்சி மூலம் திருப்பணி செய்து வரும் தொழிலாளர்களுக்கு வயது வரம்பின்றி நலவாரிய நல திட்டங்களுக்கு உரிய பதிவும், அதன் மூலம் நலத்திட்டங்கள் மற்றும் ஓய்வூதியமும் வழங்க வேண்டும். சிற்ப தொழிலாளர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சிறந்த சிற்ப தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்க வேண்டும். இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், சீர்காழி ரோட்டரி சங்க தலைவர் சுப்பிரமணியன், ரோட்டரி சங்க துணை ஆளுநர் சுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் முருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் சங்கர், செல்வம், நேரு ஆகியோர் செய்து இருந்தனர். 

Next Story