விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 8 Aug 2017 10:15 PM GMT (Updated: 8 Aug 2017 7:32 PM GMT)

விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து பெரம்பலூர் கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சிறுகுடல் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் தமிழ்செல்வன் (வயது 19). கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்செல்வன் தனது நண்பர் சிவாவுடன் (17) மொபட்டில் சிறுகுடல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மொபட் மீது மோதியது. இதில் மொபட்டின் பின்னால் அமர்ந்திருந்த தமிழ்செல்வன் படுகாயமடைந்தார். விபத்தில் படுகாயமடைந்த தமிழ்செல்வனுக்கு உரிய இழப்பீட்டை திருச்சிகோட்ட அரசு போக்குவரத்து கழகம் வழங்கக்கோரி அவரது தந்தை சுந்தரமூர்த்தி கடந்த 2-1-2013 அன்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட்டில் வழக்கு

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 857-ஐ தமிழ்செல்வனுக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என கடந்த 31-12-2014-ல் உத்தரவிட்டார். இதற்கிடையே இழப்பீட்டு தொகையை குறைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், திருச்சி கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தை அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக தமிழ்செல்வனுக்கு வழங்க வேண்டும் என 2015-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அரசு பஸ் ஜப்தி

எனினும் இழப்பீட்டு தொகையை வழங்காததால் சுந்தரமூர்த்தி நிறைவேற்று மனுவை பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி பாலராஜமாணிக்கம், வட்டியுடன் சேர்த்து அரசு போக்குவரத்து கழகம் ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 855-ஐ இழப்பீடாக தமிழ்செல்வனுக்கு வழங்க வேண்டும். மேலும் இழப்பீட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவதால் பெரம்பலூருக்கு வரும் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூரில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை நேற்று கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ் பெரம்பலூர் கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மாற்று பஸ் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். 

Related Tags :
Next Story