புதிய நீர்வழிதடங்களை ஏற்படுத்தி ஏரியில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை விதை பந்துகளை வீசவும் முடிவு


புதிய நீர்வழிதடங்களை ஏற்படுத்தி ஏரியில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை விதை பந்துகளை வீசவும் முடிவு
x
தினத்தந்தி 11 Aug 2017 10:28 PM GMT (Updated: 11 Aug 2017 10:28 PM GMT)

சேந்தமங்கலம் அருகே பொதுமக்கள் உதவியுடன் புதிய நீர்வழிதடங்களை ஏற்படுத்தி ஏரியில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பகுதியை பசுமையாக்கும் விதமாக விதை பந்துகளை வீசவும் முடிவு செய்துள்ளனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சி ஊராட்சியில் நரசிம்மன் காடு அட்டை கரடு பகுதி உள்ளது. அந்த கரட்டில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்றல் ஏரி உள்ளது. அந்த ஏரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாமரங்களும், விலா மரங்களும் அதிக அளவில் காணப்பட்டது. காலப்போக்கில் வறட்சியின் காரணமாக இவைகள் அழிந்து போனது.

இதனால் ஏரி பகுதியில் சீமை கருவேலமரங்கள் மற்றும் பயன்படாத செடி கொடிகள் அதிக அளவில் முளைத்து ஏரி பகுதி மூடி காணப்பட்டது. இதனால் அந்த கரட்டு பகுதியில் மழை பெய்தால் மழை நீர் தேங்காமல் ஓடி விடுகிறது. இதையடுத்து புதிய நீர்வழிதடங்களை ஏற்படுத்தி ஏரியில் மழைநீரை சேமிக்க தொட்டிச்சிக்காடு, தாண்டாகவுண்டனூர், நரசிம்மன்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு ஏரி பகுதியில் சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர்.

மேலும் ஏரியை சுற்றி பனைமரங்கள் நட்டு வைக்கவும், ஏரி பகுதியை சுற்றியுள்ள கரட்டுப்பகுதியை பசுமையாக்கும் விதமாக விதை பந்துகளை வீசவும் முடிவு செய்துள்ளனர். அதற்காக நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தயார் செய்யப்பட்ட 35 ஆயிரம் விதை பந்துகளை கொண்டு வந்துள்ளனர். தென்றல் ஏரியை சுத்தப்படுத்தி 4 புதிய நீர் வழிதடங்கள் மூலமாக சுமார் 2 கோடி லிட்டர் மழை நீரை அந்த ஏரியில் சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story