பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு: முன்னாள் பஞ்சாயத்து தலைவரிடம் ரூ.7 லட்சம் வசூலிக்க கலெக்டர் உத்தரவு


பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு: முன்னாள் பஞ்சாயத்து தலைவரிடம் ரூ.7 லட்சம் வசூலிக்க கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 12 Aug 2017 8:45 PM GMT (Updated: 12 Aug 2017 12:35 PM GMT)

பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்ட பூலாங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவரிடம் இருந்து ரூ.7 லட்சம் வசூலிக்க வேண்டும்.

நெல்லை,

பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்ட பூலாங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவரிடம் இருந்து ரூ.7 லட்சம் வசூலிக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

பசுமை வீடு திட்டம்

தமிழக கிராமங்களில் முதல்–அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பூலாங்குளத்தில் கடந்த 2012–ம் ஆண்டு முதல் 2015 வரை பசுமை வீடு திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டிக் கொடுக்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 36 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

தகுதியில்லாதவர்களை தேர்வு செய்ததாக கூறி அதே ஊரைசச் சேர்ந்த நடராஜன் என்பவர் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

நிதி இழப்பு

கலெக்டர் உத்தரவின் படி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் தகுதியில்லாத 4 பேருக்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் வழங்கி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அரசு இழப்பீடு ஏற்படுத்திய தொகை ரூ.6 லட்சம்து 90 ஆயிரத்தை அப்போதை பஞ்சாயத்து தலைவர் குணரத்தினத்திடம் இருந்து வசூலிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பு நோட்டீசு அவருக்கு அனுப்பப்பட்டது.


Next Story