கொடுங்கையூரில் மர்ம காய்ச்சலால் 8 வயது சிறுமி பலி


கொடுங்கையூரில் மர்ம காய்ச்சலால் 8 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 12 Aug 2017 10:45 PM GMT (Updated: 12 Aug 2017 8:02 PM GMT)

சென்னை எருக்கஞ்சேரி கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயம்பதிராஜ். வியாபாரி.

பெரம்பூர்,

இவருடைய மனைவி மெர்சி பாரதி. இவர்களுக்கு ஜெசி பிலாரன்ஸ்(வயது 10), ஜனனி ஜாஸ்மின்(8) என 2 மகள்கள் உள்ளனர்.
அங்கு உள்ள தனியார் பள்ளியில் ஜெசி பிலாரன்ஸ், 5-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜனனி ஜாஸ்மின், 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

மர்ம காய்ச்சலால் பலி

கடந்த 2-ந்தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ஜனனி ஜாஸ்மினுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவளை எருக்கஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று 2 நாட்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அங்கும் குணமாகவில்லை என கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 7-ந்தேதி சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி ஜனனி ஜாஸ்மின், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தாள்.
மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படியும், கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story