நாட்டுக்காக பதவியை தூக்கி எறிந்த சுபாஷ் சந்திரபோஸ்


நாட்டுக்காக பதவியை தூக்கி எறிந்த சுபாஷ் சந்திரபோஸ்
x
தினத்தந்தி 15 Aug 2017 7:15 AM GMT (Updated: 15 Aug 2017 7:04 AM GMT)

இந்திய தேசத்தலைவர்களில் பலர், அந்தக்காலத்தில் வெளிநாடு சென்று படித்தவர்கள். அதுபோல,

இந்திய தேசிய படையை உருவாக்கி, உலகளவில் இந்தியர்களின் வீரத்தை வெளிப்படுத்திய, சுபாஷ் சந்திரபோசும், ஐ.சி.எஸ். பட்டப் படிப்பிற்காக லண்டன் சென்றார். அங்கே புகழ்மிக்க லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு நன்கு படித்து ஐ.சி.எஸ். தேர்வில் 4-வது மாணவனாக தேர்ச்சி பெற்றார். அங்கு அரசாங்கத்தில் பணியாற்ற தொடங்கினார்.

அப்போது, இங்கிலாந்தில் புரட்சி சங்கமாக விளங்கிய இந்திய சங்கத்தில் இணைந்தார். அங்கே, மராட்டிய தலைவர் பாலகங்காதர திலகர், கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோரின் உரைகளை கேட்டு, தானும் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்க்கமான முடிவெடுத்தார்.

அதன்பிறகு 1921-ம் ஆண்டு மே மாதம், லண்டனில் மந்திரி மாண்டேகு பிரபுவை சந்தித்தார். அவரிடம், முப்பது கோடி இந்திய மக்கள் அடிமை வாழ்வில் துன்பப்பட்டு இருக்கும் போது, நான் பிரிட்டீஷ் அரசாங்கத்தில் வேலை செய்ய விரும்பவில்லை. ஆகவே, இந்த ஐ.சி.எஸ். பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி, அதை கடிதமாக எழுதிக்கொடுத்தார்.
கடிதத்தை படித்த மந்திரி மாண்டேகு பிரபு அதிர்ச்சி அடைந்து, “நன்றாக யோசித்து முடிவு செய்” என்றார். “நான், நன்றாக யோசித்து தான் முடிவு எடுத்தேன்” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி, இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார்.

லண்டனில் இருக்கும் போது சக மாணவர்கள் சுபாஷ் சந்திரபோசிடம், “படிக்கும் போது அமைதியான மாணவனாக இருந்தீர்கள். அதனால் நீங்கள் ஆன்மிகவாதி என்று நினைத்தோம், நீங்கள் எப்போது அரசியல்வாதியாக மாறினீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு சுபாஷ் சந்திரபோஸ், நெஞ்சை நிமிர்த்தி, “என்னை தீவிரவாதி என்று கூட சொல்லுங்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. என் நாடும், என் நாட்டு மக்களும் தான் எனக்கு முக்கியம். என் உயிர் உள்ளவரை அவர்களுக்காக போராடுவேன்” என்றார்.

Next Story