விபத்தில் மூளைச்சாவு: சமூக சேவகரின் உடல் உறுப்புகள் தானம் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்


விபத்தில் மூளைச்சாவு: சமூக சேவகரின் உடல் உறுப்புகள் தானம் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்
x
தினத்தந்தி 26 Aug 2017 10:41 PM GMT (Updated: 26 Aug 2017 10:41 PM GMT)

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சமூக சேவகரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

சென்னை,

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன்(வயது 40). சமூக சேவகரான இவர் கடந்த 23-ந்தேதி அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு வாகனம் மோதி புருஷோத்தமன் படுகாயம் அடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புருஷோத்தமன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் புருஷோத்தமன் மூளைச்சாவு அடைந்தார்.

உடனே அவரது உறவினர்கள் புருஷோத்தமனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். அதன் பேரில் புருஷோத்தமனின் 7 உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதயம் மற்றும் 2 சிறுநீரகங்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

கண்கள், சென்னை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது. மற்ற உறுப்புகள் சென்னையில் உள்ள 3 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. புருஷோத்தமன் இறந்த பிறகும், 7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார்.

Next Story