‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி அரசூர், திண்டிவனத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி அரசூர், திண்டிவனத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:45 PM GMT (Updated: 5 Sep 2017 7:12 PM GMT)

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி அரசூர் மற்றும் திண்டிவனத்தில் கல்லூரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசூர்,

‘நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அரசூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவ–மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்.

பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதாவின் சாவுக்கு நீதிக்கேட்டும் அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்த தாசில்தார் சுப்பிரமணியன், உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுரேஷ்பாபு, திருவெண்ணெய்நல்லூர் சப்–இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதேபோல் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி அனிதா மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்று கூறி அதனை கண்டித்து மாணவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Next Story