தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்


தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2017 11:43 PM GMT (Updated: 6 Sep 2017 11:43 PM GMT)

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் தேசிய நெடுஞ்சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி,

இதனால் இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த சாலையின் மைய பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணியும் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது.

எனவே குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று அந்த பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் துரை.ஜெயவேலு, மாவட்ட செயலாளர் குபேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. சமூக நீதி பேரவை மாநில தலைவர் வக்கீல் பாலு கூறும்போது, ‘‘குண்டும் குழியுமான இந்த தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். பாலத்தையும் விரைந்து கட்டி முடிக்க வேண்டும். சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் நடவடிக்கையை பா.ம.க. மேற்கொள்ளும். இந்த மாதத்துக்குள் சாலையை சீரமைக்காவிட்டால் அக்டோபர் 1–ந்தேதி செங்குன்றம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் கட்டண வசூலை நிறுத்தி விடுவோம். 2–ந் தேதி இந்த இடத்தில் பா.ம.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இப்பகுதி மக்கள் சார்பாக ஒரு பொதுநல வழக்கை தொடருவோம்’’ என்றார்.



Next Story