தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.32 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது


தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.32 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது
x
தினத்தந்தி 9 Sep 2017 11:00 PM GMT (Updated: 9 Sep 2017 7:09 PM GMT)

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.32 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார். இதற்கு மூளையாக செயல்பட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘பஜாஜ்’ நிதி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டு உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
‘பஜாஜ்’ நிதி நிறுவனம் சார்பில் வட்டியில்லா கடனில் வீட்டு உபயோக பொருட்களும், தனிநபர் கடனும் ஏற்பாடு செய்து தருவதாக லோகேஸ்வரி (வயது 34) என்ற பெண், பலரது பெயர்களில் வீட்டு உபயோக பொருட்களை முறைகேடாக வாங்கி தனது வீட்டில் வைத்திருக்கிறார்.

இதன்மூலம் ரூ.32 லட்சம் சுருட்டி இருக்கிறார். இதற்கு எங்கள் நிறுவன ஊழியர் பிரசாந்த் மற்றும் மற்றொரு தனியார் நிறுவன ஊழியர்கள் சுரேந்தர், விநாயகம் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புகார் மீது குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் லோகேஸ்வரி, பிரசாந்த், சுரேந்தர், விநாயகம் ஆகிய 4 பேரும் சேர்ந்து, 27 பேரின் பெயர்களில் 44 வகை வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி, குறைந்த விலைக்கு வெளியே விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுரேந்தர் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

* கடந்த 3 வாரங்களில் மட்டும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர். இந்த அரிசி மூட்டைகள் நேற்று உணவு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

* தேனாம்பேட்டையில் வீட்டில் ‘மாவா’ போதைப்பொருள் தயாரித்து விற்ற திலீப்குமார்(20) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ ‘மாவா’, அரவை எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

* புரசைவாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரன்(52), சண்முகம்(50), சீனிவாசன்(48), சந்திரன்(60), ராஜா(43), மலைச்சாமி(40), ரவி(56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* திருமுல்லைவாயலை சேர்ந்தவர் சவுந்தர்யா(34). தனது கணவர் 3 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த சவுந்தர்யா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* தண்டையார்பேட்டையில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரிஷி கனிஷ்கரிடம்(18) 2 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

* புதுவண்ணாரப்பேட்டை பாரதியார் நகரில் சங்கர் என்பவரது வீடு புகுந்து செல்போனை திருடிச்சென்ற டேவிட்(22) கைது செய்யப்பட்டார்.

* திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்த பத்மாவதி(30), டிரைவர் வேல்முருகன்(30) மற்றும் 6 இளம்பெண்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

* காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கரூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் முரளிதரனை(33) தாக்கி செல்போனை பறித்து சென்ற மதன், தேசப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* சமத்துவ மக்கள் கட்சியின் 11-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொரட்டூர், அம்பத்தூர் பஸ் நிலையம் உள்பட 4 இடங்களில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கட்சி கொடியினை ஏற்றிவைத்தார்.

* மாநிலம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூடக்கோரி பெருங்குடியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story