டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை சாவு


டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை சாவு
x
தினத்தந்தி 14 Sep 2017 9:45 PM GMT (Updated: 14 Sep 2017 5:45 PM GMT)

பொதட்டூர்பேட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே உள்ள நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேபி. இவர்களது 4 மாத குழந்தை பிரத்யூஷா. தனது குழந்தையுடன் பேபி ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார். இந்த நிலையில்  குழந்தை பிரத்யூஷாவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. குழந்தை பிரத்யூஷாவை சிகிச்சைக்காக சித்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அதன்பிறகு குழந்தையை திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தை சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.

சாவு

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை பிரத்யூஷா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தது. டெங்கு காய்ச்சல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்த மக்கள் தமிழக எல்லையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக தினசரி படையெடுத்து வருகின்றனர்.

 பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதித்த ஆந்திர நோயாளிகள் தினந்தோறும் 10–ல் இருந்து 15 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story