7 மையங்களில் சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வை 2,469 பேர் எழுதினர் கலெக்டர் ஆய்வு


7 மையங்களில் சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வை 2,469 பேர் எழுதினர் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Sep 2017 11:00 PM GMT (Updated: 23 Sep 2017 9:11 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வை 2 ஆயிரத்து 469 பேர் எழுதினர். இந்த தேர்வு மையங்களை கலெக்டர் அண்ணாதுரை நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பாசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறை சிறப்பாசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு 7 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு எழுத 2,603 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,469 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 134 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிப்பதற்காக 265 பேர் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இதில் 46 மாற்றுத்திறனாளி தேர்வர்களும், 3 கண்பார்வையற்ற தேர்வர்களும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கண்பார்வையற்ற தேர்வர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது.

எனது தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி, உதவி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட ஆய்வு அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மைய வழித்தடங்களில் தேர்வர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மற்றும் கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story