ராஜபாளையத்தில் 400 ஆண்டு பழமையான கல்சிற்பம் கண்டுபிடிப்பு


ராஜபாளையத்தில் 400 ஆண்டு பழமையான கல்சிற்பம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2017 11:00 PM GMT (Updated: 24 Sep 2017 5:25 PM GMT)

ராஜபாளையத்தில் 400 ஆண்டு பழமையான கல்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி கூறியதாவது;–

ராஜபாளையம் பகுதியானது பழமையான வரலாற்றையும், தொல்லியல் சான்றுகளையும் உள்ளடக்கிய ஊர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இப்பகுதியில் ஏராளமான பழங்கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் களப்பணியில் ஈடுபட்டிருந்த போது பழமையான கல்சிற்பம் ஒன்று மண்ணில் பாதிக்கும் மேல் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தில் வீரன் ஒருவனும், அவனது மனைவியும் சேர்ந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் இருவரின் உருவங்களும் வயிற்றுப்பகுதி வரை மட்டுமே தெரிந்தநிலையில் மீதி பாகங்கள் மண்ணில் புதைந்துள்ளதால் முழு உருவ நிலையை அறிய முடியவில்லை. அதோடு இச்சிற்பம் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதில் வீரன் ஒருவன் தனது வலது கையில் வாள் ஒன்றை உயரப்பிடித்துள்ளவாறும், அருகில் உள்ள அவனது மனைவி வலது கையில் அல்லி மலர் ஒன்றை ஏந்தியவாறும் அமைக்கப்பட்டுள்ளது. வீரன் மற்றும் அவனது மனைவி ஆகிய இருவரின் தலைக் கொண்டை அலங்காரத்துடனும், காதணிகள் அணிந்த நிலையிலும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதில் மேற்பகுதியில் கூரை போன்று சற்று நீட்டியவாறு வெயில் மற்றும் மழையிலிருந்து காப்பதற்கான முறைகளும் இச்சிற்ப வடிவமைப்பில் பின்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் உருவ அமைப்பைக் கொண்டு 400ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் இப்பகுதியில் நடைபெற்ற வீர நிகழ்வு ஒன்றில் வீரன் இறந்துவிடவே அவனது மனைவியும் தன் கணவன் மீதுள்ள அன்பு காரணமாக வீரனை எரித்த தீயில் விழுந்து இறந்ததன் நினைவாக இருவரையும் சேர்த்து, வீரம் மற்றும் கற்புடைமையைப் போற்றும் விதத்தில் அக்கால மக்களால் சிற்பமாக உருவெடுத்து வழிபட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இச்சிற்பம் மண்ணுக்குள் புதைந்து போனது. தற்போது அருகில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் திருவிழாவின் போது இக்கல் சிற்பம் முன்பு வாணவெடிகளை வெடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதால் இச்சிற்பத்தை “வாணவெடிச்சாமி“ என்று அழைக்கின்றனர்.

ஒரு காலத்தில் இப்பகுதி வளமான நீரோடை செல்லும் பகுதியாக இருந்துள்ள போதும், தற்போது ஊரின் மையப்பகுதியில் சாலையின் ஓரத்தில் பள்ளத்தில் பொலிவிழந்து காணப்பட்டு வருகிறது. இச்சிற்பத்தை மேலே எடுத்து வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் எடுத்து வைத்தால் ஏதேனும் தீங்கு நேரும் என்று பயப்படுகின்றனர். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இது ‘நடுகல்‘ ‘சதிக்கல்‘ “நினைவுச்சிற்பம்“ போன்ற சிறப்பு பெயர்களை குறிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story