‘செல்பி’ எடுக்க முயன்ற போது டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு


‘செல்பி’ எடுக்க முயன்ற போது டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 30 Sep 2017 11:00 PM GMT (Updated: 30 Sep 2017 7:25 PM GMT)

சின்னமனூரில், ‘செல்பி’ எடுக்க முயன்றபோது, டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன். அவருடைய மகன் விஜயபிரபாகரன் (வயது20). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையையொட்டி அவர், சொந்த ஊரான சின்னமனூர் வந்திருந்தார்.

இந்தநிலையில் அவர், தனது நண்பர் ஜீவா (26) என்பவருடன் அந்த பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் டிராக்டரில் உழுவதற்காக சென்றார். ஜீவா டிராக்டரை ஓட்டி கொண்டிருந்தார். பக்கத்தில் விஜயபிரபாகரன் அமர்ந்திருந்தார். விஜயபிரபாகரன் டிராக்டரில் இருந்து செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக விஜயபிரபாகரன் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

கலப்பையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான விஜயபிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘செல்பி’ எடுக்க முயன்றபோது டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story