அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் இணையலாம் தஞ்சையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி


அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் இணையலாம் தஞ்சையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
x
தினத்தந்தி 30 Sep 2017 11:00 PM GMT (Updated: 30 Sep 2017 10:03 PM GMT)

அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என தஞ்சையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

தஞ்சாவூர்,

மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம், தமிழ்நாடு அரசு கைத்தறி, துணிநூல் துறை ஆகியவை சார்பில் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கவிழா தஞ்சை ஜெயராம் மகாலில் நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதில் தஞ்சை மாவட்டம் கலெக்டர் அண்ணாதுரை, பரசுராமன் எம்.பி., சேகர் எம்.எல்.ஏ., மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் லெனின், ஜோதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் பெரியசாமி, கட்டுப்பாட்டு அலுவலர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் வாங்கப்படும் பருத்தி ரக ஜவுளிகளுக்கு 30 சதவீத தள்ளுபடியும், பட்டு ரக ஜவுளிகளுக்கு 10 சதவீத சங்க கழிவுடன் 30 சதவீத அரசு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

முன்னதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெசவாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக ஆண்டுமுழுவதும் அவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் தான் வேலை வழங்கப்படுகிறது. 1 கோடியே 65 லட்சம் இலவச வேட்டி, சேலைகளை நெய்வதற்கான வேலை நெசவாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

நெசவாளர்களுக்கு கொடுக்க வேண்டிய தள்ளுபடி மானியத்தொகை கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது உண்மை தான். நெசவாளர்களுக்கு தர வேண்டிய தள்ளுபடி மானியத்தொகையில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.40 கோடியை மத்தியஅரசும், ரூ.40 கோடியை மாநிலஅரசும் வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக மத்தியஅரசு தங்களது பங்களிப்பு தொகையை தராத காரணத்தினால் நெசவாளர்களுக்கு மானியத்தொகையை வழங்க முடியவில்லை.

தற்போது மத்தியஅரசுடன் பேசி சுமுக தீர்வு காணப்பட்டு தற்போது நெசவாளர்களுக்கான மானியத்தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மானியத்தொகை வழங்கப்படும். தஞ்சை மாவட்டத்தில 73 நெசவாளர்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பசுமை வீடுகள் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் தினகரன் சேர்ந்து கொள்ளலாம் என நான் கூறவில்லை. அ.தி.மு.க. மிகப்பெரிய இயக்கம். இதில் யார் வேண்டுமானாலும் இணையலாம். தமிழகத்தில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை என்று கூறுவது தவறு. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story