2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும்


2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும்
x
தினத்தந்தி 9 Oct 2017 11:15 PM GMT (Updated: 9 Oct 2017 9:13 PM GMT)

2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

அரக்கோணம்,

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய பேரிடர் மீட்பு படை பயிற்சி மையம் உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இந்த மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 31-வது பிரிவில் 25 உதவி கமாண்டன்டுகள், 43-வது பிரிவில் 310 சப்-இன்ஸ்பெக்டர்கள், 8-வது பிரிவில் 708 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 1,043 பேர் பயிற்சி பெற்று வந்தனர். இதில் 120 பெண்களும் அடங்குவார்கள். நேற்று அவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குனர் ஓ.பி.சிங் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டார். பின்னர் உதவி கமாண்டன்ட் பிரிவில் சிறந்து விளங்கிய பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் பிரிவில் சிறந்து விளங்கிய ராமமூர்த்தி கொண்டல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிரிவில் சிறந்து விளங்கிய விகாஸ்பால் ஆகியோருக்கு சான்றிதழ், கோப்பை மற்றும் உதவி கமாண்டன்ட் பரோல் போராஷாவிற்கு கவுரவ வாள் வழங்கி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-

இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும். உலகத்தில் உள்ள மற்ற நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு சீருடை வழங்கப்படும் போது அளவுகள் சரியில்லை என கூறப்பட்டதால், வரும் காலங்களில் ஒவ்வொரு வீரர்களுக்கும் சீருடைக்காக ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும். வீரர்கள் அரசு விதிமுறைப்படி தங்களின் அளவுகளுக்கேற்ப சீருடைகளை தயார் செய்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தாக்குதல் களில் இறந்து போகும் வீரர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து கொடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தனி அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்களின் குறைகளை மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்கும் போது அதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற புகார்கள் இருந்து வருகிறது. எனவே வீரர்களின் குறைகளை அறிய உள்துறையில் மொபைல் செயலி என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவித்தால் அந்த தகவல்கள் பாதுகாக்கப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சைபர் கிரைம் பிரிவு உருவாக்கப்பட உள்ளது. அதற்காக மாதிரி பயிற்சிகள் வீரர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

பாதுகாப்பு துறையில் ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே, மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு துறையில் அதிக அளவில் பெண்கள் பணியாற்ற முடியும்.

பயிற்சியை நிறைவு செய்த ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.

விழாவில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கும் மக்களை எவ்வாறு மீட்பது, உயரமான இடங்களில் இருந்து எவ்வாறு வேகமாக இறங்கி பணிகளை செய்வது, குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்படும் இடங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் செய்து காட்டினர். 

Related Tags :
Next Story