டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்


டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 12:43 AM GMT (Updated: 11 Oct 2017 12:43 AM GMT)

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

தஞ்சாவூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கிய கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு பாராட்டை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி நிறைவேற்றினார். ஆனால் இந்த சட்டத்திற்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க தமிழகஅரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிறப்படுத்தப்பட்டவர்கள் என அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை நிறைவேற்ற கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்க வேண்டும்.

போதிய விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டிய கடமை மத்தியஅரசுக்கும் உள்ளது. மாநில அரசு மீது பழியை போட்டு விட்டு தப்பித்து கொள்ள மத்தியஅரசு நினைக்கிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய நிதியை மத்தியஅரசு ஒதுக்க வேண்டும். டெங்கு கொசுவானது சாக்கடை நீரில் உற்பத்தியாவது இல்லை. குடிநீரில் தான் உற்பத்தியாகிறது. காய்ச்சல் வந்தால் 5, 6 நாட்களுக்கு கழித்து மருத்துவமனைக்கு செல்வதால் தான் உயிர்பலி ஏற்படுகிறது. காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநில அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் மத்தியஅரசு தான் கண்டுகொள்ளவில்லை. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநிலஅரசை வலியுறுத்தியும், மத்தியஅரசை கண்டித்தும் சென்னையில் நாளை(இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மாநிலஅரசிடம் போதிய நிதி இல்லாமல் வறட்சி நிவாரணம் வழங்க கோரி மத்தியஅரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை மத்தியஅரசு மதிக்கவில்லை. மத்தியஅரசிடம் இருந்து போதிய நிதியை பெற்றால் தான் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும். எனவே நிதியை பெறுவதற்கு மாநிலஅரசு முயற்சி செய்ய வேண்டும்.

ஜனநாயகம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தும்போது கெடுபிடி எதுவும் செய்யாமல் பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் முதல்-அமைச்சர் செயல்பட வேண்டும். கெய்ல் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது. அதை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். ஏற்கனவே தமிழக கவர்னராக இருந்தவர், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி தான் செயல்பட்டார். புதிய கவர்னரும் அவர் வழிகாட்டுதலின்படி செயல்படாமல் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட்டதால் தான் ஜனநாயகத்தை காக்க முடியும். உள்ளாட்சி தேர்தலை தள்ளிபோடுவது சட்டத்திற்கு எதிரானது. எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story