நடுக்கடலில் மீன் பிடிக்கும் துணிச்சல் பெண்


நடுக்கடலில் மீன் பிடிக்கும் துணிச்சல் பெண்
x
தினத்தந்தி 15 Oct 2017 9:45 AM GMT (Updated: 15 Oct 2017 9:33 AM GMT)

அலைஅடிக்கும் கடல். உச்சி வெயில் அடிக்கும் நேரம். கரையில் இருந்து வெகு தூரத்தில் கடலில் சென்றுகொண்டிருக்கும் பைபர் படகின் என்ஜினை ரேகா இயக்கிக் கொண்டிருக்கிறார்.

லைஅடிக்கும் கடல். உச்சி வெயில் அடிக்கும் நேரம். கரையில் இருந்து வெகு தூரத்தில் கடலில் சென்றுகொண்டிருக்கும் பைபர் படகின் என்ஜினை ரேகா இயக்கிக் கொண்டிருக்கிறார். அருகில் கணவர் கார்த்திகேயன் உட்கார்ந்திருக்கிறார். “கடலில் இன்று அலை ஆவேசமாக அடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் வலை வீசுவது சிரமமாக இருக்கிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வலையை மாற்றவேண்டியதிருக்கிறது” என்று, மீன் பிடிப்பதில் தனக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்தை ரேகா வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, கடலில் அவரை கடந்து மீன்பிடிப் படகு ஒன்று வேகமாக செல்கிறது. அதை இயக்கிக் கொண்டிருந்த ஆண், ரேகாவை பார்த்து கையை வீசி உற்சாகத்தை வெளிப்படுத்த, ஒரு கையால் படகின் இயந்திரத்தை இயக்கிய படி மறுகையை அவருக்கு வீசி பதிலுக்கு உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார். அவரது படகு கரையை நோக்கித் திரும்புகிறது. என்ஜினை இயக்கும் பொறுப்பை கணவர் ஏற்றுக்கொள்ள, படகு கரை அருகில் வந்ததும் ரேகா அதிலிருந்து குதிக்கிறார். கணவர் படகோடு கரைக்கு வர உதவுகிறார். படகு கரைக்கு வந்துவிட்டது.

கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் அவரது அனுபவங்களை கேட்க தொடங்கினால், ரேகாவிடம் உற்சாகம் பொங்குகிறது. “முதலில் என் கணவர் சிறிய கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க சென்றார். அவர் கரைக்கு வந்த பின்பு மீன்களை பிரித்தெடுக்க நான் உதவுவேன். அடுத்து பைபர் படகு வாங்கினார். அப்போது அவருக்கு உதவி செய்ய கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டார்கள். அந்த ஆட்கள் ஒழுங்காக வேலைக்கு வராததால், நானும் கணவரோடு கடலுக்கு செல்லவேண்டியதானது. நாங்கள் மூன்றுபேர் படகில் பயணிப்போம். ஒருவர் என்ஜினை இயக்குவார். இரண்டு பேர் வலைவீசுவோம். அலை குறைவாக இருக்கும் நாட்களில் நானும், என் கணவரும் மட்டும் செல்வோம்” என்கிறார், ரேகா.

இவரிடம் கடலுக்குள் சென்ற முதல் அனுபவத்தை கேட்டபோது, முகத்தில் லேசான சோகம் எட்டிப்பார்க்கிறது.

“முதல் அனுபவத்தை நினைத்துக் கொண்டிருந்தால், கடலுக்குள் செல்லவே விருப்பம் இருக்காது. முதல் நாள் மீன்பிடிக்கவே முடியவில்லை. எனக்கு கட்டுப்படுத்த முடியாத வாந்தி ஏற்பட்டது. வாந்தியில் ரத்தம்கூட வந்தது. என்னால் நிற்க முடியவில்லை. அலையின் ஏற்ற இறக்கத்தில் படகு செல்லும்போது நிற்பதற்கு பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறினேன். எப்படியோ முதல் நாள் தட்டுத்தடுமாறி கரை சேர்ந்தேன். வீட்டில் இருக்கும் கஷ்டத்தை நினைத்தபோது, முதல் நாள் பட்ட அவஸ்தை எல்லாம் மறந்து போனது. அதனால் மறு நாளும் கடலுக்கு சென்றேன். காலப்போக்கில் வாந்தி நின்றுவிட்டது. அதிகாலை மூன்று.. நான்கு மணிக்கெல்லாம் மீன் பிடிக்க செல்லவேண்டிய திருக்கும். மதியம் இரண்டு மணிக்குத்தான் திரும்பி வர முடியும்” என்கிறார்.

‘கரையில் இருப்பவர் களுக்குத் தெரியாத கடல் ரகசியங்கள் எதை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?’ என்று ரேகாவிடம் கேட்டபோது..

“நாங்கள் மிகுந்த கஷ்ட வாழ்க்கை நடத்துகிறோம். அதனால் பயணம் செய்ததில்லை. எனது கணவரின் நண்பர் ஒருவர் வெளிநாடு சென்றபோது அவரை விமானம் ஏற்றிவிட கோழிக்கோடு சென்றோம். திருமணம் முடிந்த பிறகு நான் சாலையில் போன பயணமே அது ஒன்றுதான். கடலுக்குள் நிறைய நாட்கள் போயிருக்கிறேன். ரொம்ப தூரம் போனதும் கடலின் நிறம் மாறும். நீலக் கடல் பச்சைக் கடலாகத் தெரியும். அங்கு மீன்கள் தண்ணீருக்கு மேல் குதிப்பதை காணலாம். அங்கு நமக்கு தெரியாத பல வண்ண மீன்களையும் பார்க்க முடியும்.

கரையில் இருப்பவர்களைவிட கடலுக்குள் வருகிறவர்கள் அதிக பாசம் காட்டுவார்கள். என்ஜினை இயக்க எரிபொருள் இல்லாவிட்டாலும், வேறு படகில் வருகிறவர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். வெளியே அதை வாங்குவது கடினம். முன்பு என்னை கடலில் பார்ப்பவர்கள், ‘அதோ கடலில் ஒரு பெண்..!’ என்று ஆச்சரியமாக பார்ப்பார்கள். இப்போது அருகில் வந்து, ‘அக்கா எப்படி இருக்கீங்க?’ என்று நலம் விசாரிப்பார்கள்” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

பெண்ணுக்கு கடலில் வேலையில்லை. அவள் கரையில்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை திருத்தியிருப்பவர் ரேகா. அதனால் இவர் கேலிக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகவும் செய் திருக்கிறார்.

“ஊரில் பலர் நிறைய விமர்சனம் செய்தார்கள். பெண் கடலில் இறங்கினால் கடல் அழிந்துபோகும் என்றார்கள். பெரிய பிரச்சினைகள் உருவாகும் என்றெல்லாம் சொன்னார்கள். நானும் பத்து வருடங்களாக கடலுக்குள் போய்க்கொண்டிருக் கிறேன். கடல் அழியவில்லை. மீன்களும் நிறைய உற்பத்தியாகிக்கொண்டுதான் இருக்கின்றன..”என்கிறார்.

ரேகாவின் கணவர் கார்த்திகேயனும் கேலிக்கு உள்ளாகி யிருக்கிறார்.

“இதோ மனைவியையும் கடலுக்குள் கூட்டிக்கிட்டு போறான் பாரு என்றார்கள். நாங்கள் கடலுக்குள் போனால்தான் எங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு போட முடியும். கடல் எங்களின் தாய். அம்மாவிடம் பெண் பிள்ளைகள் போகக்கூடாதா? சென்ட்ரல் மரைன் பிஷரீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் எங்களுக்கு ஊக்கமளித்தது. கடலில் போய் மீன் பிடிக்கும் இந்தியாவின் முதல் தம்பதி என்று எங்களை அறிவித்தார்கள். அதன் பின்புதான் ஓரளவு மரியாதை கிடைத்தது.

நாங்கள் வாங்கியிருந்த பழைய கடன்களில் ஒருபகுதியை திரும்ப செலுத்திவிட்டோம். நண்பர்களின் உதவியோடுதான் இந்த பழைய பைபர் படகினை வாங்கினோம். இதில் இருக்கும் பழைய என்ஜினை மாற்றிவிட்டு புதிய என்ஜினை பொருத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும். சில நாட்கள் மீன்களே இருக்காது. சில நாட்களில் பத்தாயிரம் ரூபாய்க்குகூட மீன்கள் கிடைக்கும். மீன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஒரு தடவை கடலுக்குள் போய் வர பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய்க்காக 3500 ரூபாய் செலவிடவேண்டியதுவரும்..” என் கிறார், கார்த்திகேயன்.

நடுக்கடலை சுட்டிக்காட்டும் ரேகா, “இந்த கடல் என்னை பலமுறை பயமுறுத்தியுள்ளது. பாதுகாக்கவும் செய்திருக்கிறது. ஒரு நாள் இரவு 2 மணி. நடுக்கடலில் நான் சென்றுகொண்டிருந்தேன். என்னுடன் இருந்த இருவரும் தூங்கிவிட்டார்கள். திடீரென்று ஒரு மின்னலைப் போன்ற வெளிச்சத்தை பார்த்தேன். இன்னொரு பெரிய படகின் மீதுள்ள வெளிச்சம்தான் அது என்பதை உணர்ந்தேன். அதில் இருப்பவர் மீன் பற்றி விசாரிக்க அருகில் வருகிறார் என்று நினைத்தேன். அருகில் வரும்போதுதான் பார்த்தேன். படகை இயக்க வேண்டியவர் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார். நான் அலறி கூச்சல் போட்டதும் அவர் விழித்து படகை முழு வேகத்தில் திருப்பினார். அதன் பிறகும் எங்கள் படகின் ஓரத்தில் அது இடித்துவிட்டது. நான் கூச்சல் போடாமல் இருந்திருந்தால் பெரும் வேகத்தில் வந்த படகு மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். என் உயிரே போயிருக்கும்.

கடலின் இயல்பு எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. ஒருமுறை கடலுக்குள் சென்றபோது அமைதியாக இருந்தது. உள்ளே சென்றதும் சூழ்நிலை மாறியது. பயங்கர காற்று, படகில் தண்ணீர் ஏறிவிட்டது. நாங்கள் நாலைந்து பேர் படகில் இருந்தோம். அப்போது எனக்கு நீச்சல் தெரியாது. நீச்சல் தெரிந்தாலும் நடுக்கடலில் எதுவும் செய்யமுடியாது. கடல் ஓரளவு அமைதியானதும், எப்படியோ போராடி தப்பித்து வெளியே வந்தோம்.

ஒரு தடவை பெரிதாக ஏதோ ஒன்று வலையில் சிக்கியது போலிருந்தது. என்னவென்று பார்த்தால் 50 கிலோ எடைகொண்ட கடல் ஆமை. வலையை சுருட்டி அதனை காப்பாற்றி அங்கேயே விட்டோம். அது தலையை திருப்பி என்னை பார்த்துவிட்டு போனது. பாசம் இருந்திருக்கும். அதை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கும்..” என்கிறார்.



கார்த்திகேயன்- ரேகா தம்பதிகளுக்கு நான்கு மகள்கள். அவர்களின் மூத்த பெண் பிளஸ்-டூ படித்துக்கொண்டிருக் கிறாள்.

குடும்பத்தை பற்றி பேசும்போது ரேகாவின் முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

“கடலை கடந்து வெளியே வந்தால், இந்த வீடுதான் என் உலகம். நாங்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்து கொண்டோம். என் மாமாவின் நண்பர் இவர். முதலில் எங்களுக்குள் காதல் இல்லாவிட்டாலும், சிலர் எங்களுக்குள் காதல் இருப்பதாக சொன்னதால் காதலிக்கத் தொடங்கினோம். வாழ்ந்து காட்டவேண்டும் என்று சவால் விட்டு வாழ்க்கையில் இணைந்தோம். முதலில் குடும்பத்தில் எதிர்த்தார்கள். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.” என்று கூறும் ரேகா திருச்சூரை சேர்ந்தவர். பள்ளி இறுதிக் கல்வியை முடித்து கல்லூரியிலும் சேர்ந்து படித்திருக்கிறார். இந்தியும் ஓரளவு கற்றிருக்கிறார். 

Next Story