பாளையங்கோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு


பாளையங்கோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 17 Oct 2017 9:30 PM GMT (Updated: 17 Oct 2017 2:38 PM GMT)

பாளையங்கோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு செந்தில்நகர் முப்பிடாதி அம்மன் கோவில் தெரு பகுதியில் மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும் துப்புரவு பணிகள், டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். தொடர்ந்து, வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களிடம், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் கொசு புழு உற்பத்தியாகிறதா என்பதையும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பதையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நெல்லை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை நாள்தோறும் அதிகாலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த பணிகளில் 2 ஆயிரம் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 10 தினங்களுக்குள் நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசு கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன், உதவி ஆணையர் வசந்தராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், தாசில்தார் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story