தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 7 பேர் பலி


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 7 பேர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2017 11:00 PM GMT (Updated: 20 Oct 2017 9:34 PM GMT)

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு கர்ப்பிணி உள்பட 7 பேர் பலியானார்கள்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் சிவா. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சாரதா (வயது 26). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாரதாவுக்கு, ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. இதற்கிடையில் சாரதா மீண்டும் கர்ப்பமானார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தார். சோழவந்தானை அடுத்த விக்கிரமங்கலம் அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அருள்பிரகாசம் (38). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புனுகன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்னையப்பா, விவசாயி. இவரது மகன் அம்ரீஷ் (20). இவர் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், பி.பி.ஏ.படித்து வந்தார். மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அம்ரீஷ் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள ஈராடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் ராஜேந்திரன் (42), விவசாயி. கடந்த 15-ந்தேதி முதல் ராஜேந்திரன் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச்சேர்ந்தவர் சுரேஷ் (31).இவரது மனைவி ரேவதி (21). இவர்களது 8 மாத ஆண் குழந்தை அஜய்க்கு மர்ம காய்ச்சல் இருந்தது. கோவை தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மாலை குழந்தையை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை அஜய் நேற்று இறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி கவிதா. இவர்கள் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுடைய மகள்கள் தர்ஷனி (7), ஜோஷிகா (1½). தர்ஷனிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தர்ஷனி நேற்று பரிதாபமாக இறந்தாள். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சோலைக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். தொழிலாளி. இவருடைய மகள் ரோஜாஸ்ரீ (வயது 11). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். ரோஜாஸ்ரீ கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். இதனால் ரோஜாஸ்ரீயை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு கொண்டு சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்றபோது ரோஜாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். 

Related Tags :
Next Story