அரசு போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விழுந்தது: டிரைவர்கள்-கண்டக்டர் உள்பட 8 பேர் பலி


அரசு போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விழுந்தது: டிரைவர்கள்-கண்டக்டர் உள்பட 8 பேர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2017 11:15 PM GMT (Updated: 20 Oct 2017 9:47 PM GMT)

நாகை மாவட்டம் பொறையாறில் போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விழுந்ததில் டிரைவர்கள்-கண்டக்டர் உள்பட 8 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் பொறையாறு வாலியத்தெருவில் சக்திவிலாஸ் என்ற தனியார் பஸ் கம்பெனி இருந்தது. இது 1943-ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த கம்பெனி கட்டிடம் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சுண்ணாம்பு காரைகள், செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டது. இங்கு கண்டக்டர்-டிரைவர்கள் தங்குவதற்கு ஓய்வு அறை, பஸ்களை நிறுத்துமிடம், பணிமனை, பஸ்சுக்கு கூண்டு கட்டும் பிரிவு, அலுவலகம் ஆகியவை தனி, தனி கட்டிடத்தில் இருந்தன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு 70-க்கும் மேற்பட்ட பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டன.

1974-ம் ஆண்டு தனியார் பஸ் கம்பெனிகள் அரசு உடைமையாக்கப்பட்டு சோழன் போக்குவரத்து கழகமாக செயல்பட தொடங்கியது. அப்போது, பொறையாறில் உள்ள பஸ் கம்பெனியும் அரசுக்கு சொந்தமானது. தற்போது இங்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை இயங்கி வருகிறது. 200-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பஸ்களை பணிமனையில் நிறுத்திவிட்டு, கட்டிடத்தின் மேல்தளத்தில் உள்ள ஓய்வு அறையில் டிரைவர்-கண்டக்டர்கள் 11 பேர் தூங்கி கொண்டிருந்தனர். கீழ்தளத்திலும் சிலர் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் திடீரென கட்டிடத்தின் மேல்தளம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது கீழ் தளத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் சத்தத்தை கேட்டு வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர். ஆனால், கட்டிடத்தின் மேல்தளத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார், பொறையாறு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பூம்புகார் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று பொக்லின் எந்திரங்கள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார்.

கட்டிடத்தில் விரிசல் அதிகமாக இருந்ததால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் பஸ் டிரைவர்களான பொறையாறு இச்சிலடி தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் தனபால் (வயது 52), காளகஸ்திநாதபுரத்தை சேர்ந்த ஜம்புநாதன் மகன்கள் பிரபாகரன் (54), பாலு (52), கீழபெரம்பூரை சேர்ந்த செல்வராஜ் மகன் முனியப்பன் (42), திருக்குவளை மணக்குடியை சேர்ந்த மாரியப்பன் மகன் அன்பரசன் (26), கீழையூர் உடையார்தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்திரசேகரன் (45), காலமநல்லூர் வடக்கட்டளையை சேர்ந்த பொன்னுசாமி மகன் மணிவண்ணன் (53), கண்டக்டர் சிக்கல் கோவிந்தசாமி மகன் ராமலிங்கம் (57) ஆகிய 8 பேர் இறந்தது தெரியவந்தது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவர்களுடைய உறவினர்களும், சக தொழிலாளர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சுகள் மூலம் பொறையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கண்டக்டர்கள் மேலபெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார், கீழமாங்குடி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், டிரைவர் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பிரேம்குமார் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கட்டிடம் இடிந்ததில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், கட்டிடத்தை சீரமைக்காத அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலியான டிரைவர்கள்-கண்டக்டரின் உறவினர்கள் பொறையாறு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், மயிலாடுதுறை பாரதிமோகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பவுன் ராஜ், ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும். இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங் கப்படும்” என உறுதி அளித்தார். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் பொறையாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜலு, டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story