புளியந்தோப்பில் கோஷ்டி மோதலில் 2 பேர் காயம்; 15 மோட்டார் சைக்கிள்கள் சேதம் 9 பேர் கைது


புளியந்தோப்பில் கோஷ்டி மோதலில் 2 பேர் காயம்; 15 மோட்டார் சைக்கிள்கள் சேதம் 9 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2017 10:45 PM GMT (Updated: 21 Oct 2017 7:46 PM GMT)

புளியந்தோப்பில், கோஷ்டி மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். 15 மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 28). இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பர் விக்னேஷ் (23). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சூளை தட்டான்குளம் சாலையில் மோட்டார் சைக்களில் சென்ற போது எச்சில் துப்பியதாகவும், அப்போது அப்பகுதியில் உள்ள ஒருவர் மீது எச்சில் பட்டதாகவும் தெரிகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த கோஷ்டி மோதலில் அஜய், விக்னேஷ் இருவரும் காயம் அடைந்தனர். அங்கிருந்து சென்ற இருவரும் கே.பி.பார்க் பகுதியில் இருந்து தங்கள் நண்பர்கள் 10 பேருடன் மீண்டும் தட்டான்குளம் சென்று அங்கிருந்த 15-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர்.

இது குறித்து சூளை தட்டான்குளம் பகுதியை சேர்ந்த குமார்(55) அளித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியதாக கே.பி.பார்க்கை சேர்ந்த பிரவீன்குமார்(20), சரத்குமார்(24), பரத் (20), உதயகுமார்(20), ராஜசேகர்(19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தட்டான்குளம் பகுதியினர் தாக்கியதால் காயம் அடைந்த அஜய், விக்னேஷ் இருவரும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி அவர்கள் அளித்த புகாரின்பேரில் சூளை தட்டான்குளத்தை சேர்ந்த மதன்(37), கங்காதரன்(54), மூர்த்தி (53), சந்தோஷ்குமார்(20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான இருதரப்பையும் சேர்ந்த 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பிச்சென்ற கே.பி.பார்க் பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story