தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததற்கும், மெகந்தி வைத்ததற்கும் தண்டனை வழங்கிய தனியார் பள்ளி முற்றுகை


தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததற்கும், மெகந்தி வைத்ததற்கும் தண்டனை வழங்கிய தனியார் பள்ளி முற்றுகை
x
தினத்தந்தி 21 Oct 2017 11:15 PM GMT (Updated: 21 Oct 2017 9:47 PM GMT)

தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததற்கும், மெகந்தி வைத்ததற்கும் மாணவ-மாணவிகளுக்கு தண்டனை வழங்கிய தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

திருச்சி,

திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் செர்வைட் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் காலை 9 மணி அளவில் இறை வணக்கம் தொடங்கியது. அப்போது தீபாவளி பண்டிகைக்கு யாரெல்லாம் பட்டாசு வெடித்தது என்றும், அவர்கள் கையை தூக்குங்கள் என்றும் ஆசிரியர்கள் கேட்டுள்ளனர்.

7 பேரை தவிர மற்ற மாணவ-மாணவிகள் கையை தூக்கி உள்ளனர். அப்போது பட்டாசு வெடிக்காத மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற மாணவ-மாணவிகளை கைகளை கட்டிக்கொண்டு இறை வணக்கம் முடியும்வரை தலை குனிந்து நிற்கும்படி கூறி தண்டனை வழங்கியதாக தெரிகிறது. இதேபோல் கையில் மெகந்தி வைத்து இருந்த ஒரு மாணவியை ஆசிரியர் ஒருவர் அடித்ததாகவும் கூறப் படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றதும் பெற்றோரிடம் இது பற்றி கூறி உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் அங்கு திரண்டு சென்று பள்ளியை முற்றுகையிட்டு, தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக மாணவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில், “எங்களுக்கு கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்தும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தும் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தான் மாணவ-மாணவிகளை கண்டித்ததாகவும் கூறி உள்ளனர்.

இதையடுத்து பெற்றோர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர். இது தொடர்பாக பாலக்கரை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story