கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை


கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Nov 2017 10:00 PM GMT (Updated: 1 Nov 2017 7:43 PM GMT)

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

திருப்போரூர்,

வடகிழக்கு பருவமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து அரசு துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கையை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் முன்எச்சரிக்கை குழு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை வெளியேற்றி பாதுகாத்திடும் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உறைவிடம் நிர்வகிக்கும் குழு என தனித்தனி குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம், திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர், மானம்மதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்கள், பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மணல் மூட்டைகள், மரப்பலகைகள், சவுக்கு கம்புகள், பொக்லைன் எந்திரங்கள், படகுகள் போன்றவை தயார் நிலையில் உள்ளன.

பொதுப்பணித்துறையால் ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மண்டல அலுவலர் முரளி, திருப்போரூர் தாசில்தார் விமல்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஏரி கரைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவளம், கேளம்பாக்கம் குடியிருப்பு பகுதியில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.


Next Story