குப்பையில் கிடந்த ஆதார் அட்டைகள், தபால்கள் பொதுமக்கள் அதிர்ச்சி


குப்பையில் கிடந்த ஆதார் அட்டைகள், தபால்கள் பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 1 Nov 2017 11:00 PM GMT (Updated: 1 Nov 2017 9:14 PM GMT)

கிருஷ்ணகிரியில் குப்பையில் ஆதார் அட்டைகள், தபால்கள் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நேதாஜி சாலையில் துப்புரவு பணியாளர்கள் நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் குப்பை தொட்டியில் இருந்து மூன்று மூட்டைகளை எடுத்து வந்து நகராட்சி துப்புரவு அறைக்கு அருகில் வைத்து இருந்தனர். இந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது மூட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஏராளமான ஆதார் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

மேலும் கடந்த 2015-16ம் ஆண்டில் அகசிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கனகமுட்லு தபால் நிலையத்திற்குண்டான தபால்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்காமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த குப்பை மூட்டையில் ஆதார் அட்டைகள், கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியில் இருந்து வழங்கப்படும் அழைப்பு மற்றும் அறிவிப்பு கடிதங்கள், வங்கிகளில் இருந்து அனுப்பப்படும் உத்தரவு தபால்கள் மற்றும் நகை ஏல அறிவிப்பு தபால்கள் என பல்வேறு தபால்கள் இருந்தது.

இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தபால்களை பொதுமக்களுக்கு ஒப்படைக்காமல் குப்பையில் வீசி சென்ற தபால்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அஞ்சலக கண்காணிப்பாளர் சுப்பாராவ்விடம் கேட்ட போது இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Tags :
Next Story