நடிகையுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.5 கோடி கேட்டு மிரட்டினார்கள்


நடிகையுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.5 கோடி கேட்டு மிரட்டினார்கள்
x
தினத்தந்தி 3 Nov 2017 10:30 PM GMT (Updated: 3 Nov 2017 8:56 PM GMT)

நடிகையுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக ‘வாட்ஸ்–அப்‘ வீடியோவை வெளியிட்டு சாமியார் தயானந்த் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு எலகங்கா அருகே உனசமாரனஹள்ளியில் உள்ள மட்டேவனபுரா மடத்தின் மடாதிபதியாக சிவாச்சாரியா இருந்து வருகிறார். இவரது மகனும், சாமியாருமான தயானந்தை மடத்தின் அடுத்த மடாதிபதியாக நியமிக்க சிவாச்சாரியா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் (அக்டோபர்) 26–ந் தேதி சாமியார் தயானந்தும், கன்னட நடிகை ஒருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் மடத்தின் முன்பு பக்தர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாமியார் தயானந்த் தலைமறைவாகி விட்டார். மேலும் சாமியார் தயானந்தை மடாதிபதியாக நியமிக்க முடியாது என்று வீரசைவ சமுதாயத்தை சேர்ந்த மடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சாமியார் தயானந்த் வாட்ஸ்–அப் மூலம் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசி இருப்பதாவது:–

என்னை மடாதிபதியாக நியமிக்கக்கூடாது என்பதற்காக மடத்தின் நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2014–ம் ஆண்டு சிலர் என்னை சந்தித்து நான் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோவை காட்டினார்கள். அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.5 கோடி கேட்டு மிரட்டினார்கள். இதற்காக தர்மேந்திரா, மல்லிகார்ஜூன் என்பவர்களுக்கு ரூ.45 லட்சம் கொடுத்தேன். அதன்பிறகு, சூர்யா என்பவர் தன்னிடமும் அந்த வீடியோ இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க ரூ.20 லட்சம் கொடுக்கும்படி கேட்டு மிரட்டினார். பின்னர் சூர்யாவுக்கும் ரூ.10 லட்சம் கொடுத்தேன்.

எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டு என்று நினைத்தபோது மடத்தின் நிர்வாகியான மகேசும் தன்னிடம் வீடியோ இருப்பதாக மிரட்டினார். இதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன். பின்னர் மகேஷ் தான் என்னை காப்பாற்றினார். தற்போது அந்த வீடியோ காட்சிகளை மகேஷ் உள்ளிட்டவர்கள் தான் வெளியிட்டு இருக்க வேண்டும். நான் மடாதிபதியாக ஆகக்கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டுள்ளனர். என்னிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு தயானந்த் பேசி இருந்தார்.


Next Story