போலி ஆவணங்கள் மூலம் ‘பாஸ்போர்ட்’ பெற முயற்சி சென்னையில் 5 பேர் கைது


போலி ஆவணங்கள் மூலம் ‘பாஸ்போர்ட்’ பெற முயற்சி சென்னையில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2017 10:35 PM GMT (Updated: 13 Nov 2017 10:35 PM GMT)

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ‘பாஸ்போர்ட்’ பெற முயற்சித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

இலங்கையை சேர்ந்தவர் சஞ்சீவி என்ற சுதர்சன் (வயது 29). இவர் கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் தற்போது வசிக்கிறார். சுதர்சன், தன்னுடைய நண்பர்களான சபீக் அகமது(29), முகமது சலீம்(60), குமார்(30), பெர்னாட் சேவியர்(67) ஆகியோரின் உதவியுடன் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற முயற்சிப்பதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு ரகசியமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சஞ்சீவி சென்னை ஆழ்வார்திருநகரில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்து ‘பாஸ்போர்ட்’ பெற முயற்சித்தார். போலீஸ் விசாரணையில் அங்கு அவர் வசிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மேற்கண்ட முகவரி மூலம் இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்ததும் தெரிய வந்தது.

இதையொட்டி நேற்று சஞ்சீவி என்ற சுதர்சன், அவருடைய கூட்டாளிகள் சபீக் அகமது, முகமது சலீம், குமார், பெர்னாட் சேவியர் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நிறைய பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொண்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. யாருக்காவது போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக்கொடுத்து இருக்கிறார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.
கைதானவர்களில் சபீக் அகமது தான் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து இருக்கிறார். குமாரும், பெர்னாட் சேவியரும் தரகர்களாக செயல்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Next Story