தாண்டிக்குடியில் மது குடித்த தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து சாவு மீதம் இருந்த மதுவை அருந்திய தந்தையும் பலி


தாண்டிக்குடியில் மது குடித்த தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து சாவு மீதம் இருந்த மதுவை அருந்திய தந்தையும் பலி
x
தினத்தந்தி 17 Nov 2017 9:30 PM GMT (Updated: 17 Nov 2017 8:24 PM GMT)

தாண்டிக்குடியில், மது குடித்த தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து இறந்தார். மீதம் இருந்த மதுவை அருந்திய அவரின் தந்தையும் பலியானார்.

பெரும்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி கூடம்நகரை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது 59). இவருடைய மனைவி மீனா. இவர்களுடைய மகன் நாகராஜ் (36). கூலித்தொழிலாளி. இவர் திருமணமாகி பண்ணைக்காடு காமராஜபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நாகராஜ், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.

பின்னர் மீதம் இருந்த மதுபானத்துடன் வீட்டுக்கு வந்த அவர், சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் நேற்று கோட்டைச்சாமியிடம் அவருடைய குடும்பத்தினர் நாகராஜ் வைத்து இருந்த மதுபான பாட்டிலை காண்பித்து, இதனால் தான் அவர் இறந்ததாக தெரிவித்தனர். உடனே அந்த மதுபாட்டிலை வாங்கிய கோட்டைச்சாமி தான் அதை பரிசோதிப்பதாக கூறி மீதம் இருந்த மதுவை குடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கும் ரத்த வாந்தி ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தை–மகன் குடித்த மதுபானத்தில் வி‌ஷம் கலக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுபான பாட்டிலையும் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


Next Story